'பிளைட்' ஏறுவதற்காக.. துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பயணி.. அதிகாரிகள் அதிர்ச்சி.. பரபரப்பான கோவை!
கோவை: கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் உள்ள விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி பரிசோதனை, இ-பாஸ் போன்ற சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவரை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பயணி தனது பையில் 5 துப்பாக்கி குண்டுகள் வைத்து இருந்ததே அதிர்ச்சிக்கு காரணம். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். அவரது பெயர் ஜோகிந்தர் குமார் என்பதும் டெல்லி செல்லும் இன்டிகா விமானத்தில் பயணிக்க இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஜோகிந்தர்குமார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்களை அவர் வைத்திருந்தார். போலீசார் அந்த ஆவணங்களை பரிசோதனை செய்து ஜோகிந்தர்குமாரை பயணம் செய்ய அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications