"மூட்டைப் பூச்சி தொல்லை".. கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோயாளிகளுக்கு வீல் சேர் தரப்படாமல் அலைக்கழிப்பதாக நோயாளியின் உறவினர் குற்றம்சாட்டி, நோயாளியை தோள் மேல் தாங்கிப் பிடித்தவாறு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் பிரச்சனை ஓய்வதற்குள் தற்போது கோவை அரசு மருத்துவனையில் மூட்டைப்பூச்சி தொல்லையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரமாக கோவை விளங்கி வருகிறது. கோவை மாவட்டத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், மருத்துவம் போன்ற பல்வேறு தேவைக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையில் பல முக்கிய நோய்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை அரசு மருத்துமனைக்கு வந்த செல்கின்றனர்.

கோவையைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் கோவைக்கு வந்து தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 புதிய கட்டடங்கள், பழைய கட்டடங்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் ஆகியவை இங்கு செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு முக்கிய மருத்துவங்களுக்கான அதிநவீன கருவிகள் இங்கு உள்ளன. இதன் மூலமாக பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நோயாளிக்கு வீல் சேர் தரப்படவில்லை என்பதால், தனது 80 வயதான தந்தையை மகன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் மூட்டைப்பூச்சி தொல்லையால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் பிரிவில் மூட்டைப் பூச்சி தொல்லை இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால், சரிவர ஓய்வெடுக்க முடியாமல், உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மகாவீர் பில்டிங் 82 ஆவது வார்டு உள்நோயாளிகள் பிரிவில் அதிகளவிலான மூட்டை பூச்சிகள் உள்ளன.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து தெளிக்கப்பட்டது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உரிய ஆய்வு மேற்கொண்டு, மூட்டைப் பூச்சி தொல்லைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications