பட்டா மாறுதல் வேணுமா.. 15 நாளில் பட்டாவில் பெயர் மாற்றம்.. உட்பிரிவு செய்ய 30 நாள்.. கலக்குது கோவை
கோவை: பட்டா மாறுதல் வெறும் 15 நாட்களில் சாத்தியமாகிறது. இதுகுறித்த முக்கிய உத்தரவு ஒன்றினை கோவை மாவட்ட டிஆர்ஓ பிறப்பித்திருக்கிறர்ர்.. இதற்கெல்லாம் காரணம், சேவை பெறும் உரிமை சட்டம்தான்.. இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
கோவையை பொறுத்தவரை, அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.. எனவே, அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கு "சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்று பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

காலக்கெடு: அரசின் சேவைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் பெற, 'சேவை பெறும் உரிமைச் சட்டம்' வழிவகை செய்கிறது. இந்த "சேவை பெறும் உரிமை சட்டத்தின்படி" அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத் தொகை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது.. எனவேதான் இந்த சட்டத்தை பொதுமக்களே கோரி வந்தனர்.
26 வகையான சான்றிதழ்: பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட நிர்வாகமும் அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது.. அதன்படி, வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் வழங்க, மாவட்ட நிர்வாகம் வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறது..
இது குறித்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா சொன்னதாவது: "தமிழக அரசின் நில வருவாய்த்துறை கமிஷனரின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை சார்ந்த பணிகளை வேகமாக முடித்து, மக்களுக்கு அதன் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற, கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை: வருவாய்த்துறை சார்ந்த 26 சான்றிதழ்கள், ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒருவேளை சான்றிதழ் இணைக்காவிட்டால், அதற்கான காரணங்களையும், தேவையான ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததால், இப்போது சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், விசாரணை செய்வதற்காக போனில் வரவழைத்து லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரப்பூர்வமான புகார்கள் மீது, நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலியான புகார்கள் கொடுப்போர் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று எச்சரித்துள்ளார் டிஆர்ஓ ஷர்மிளா.
சபாஷ் பணிகள்: அந்தவகையில், பட்டா மாறுதல், பெயர் மாற்றம் - 15 நாட்களும், ரேஷன் கார்டு - 30 நாட்களும், வாரிசுச் சான்றிதழுக்கு 15 நாட்களும், உட்பிரிவு செய்தல்- - 30 நாட்களும், இறப்புச் சான்றிதழ் - 7 நாட்களும், வருவாய் சான்றிதழ்- - 15 நாட்களும், ஜாதிச்சான்றிதழுக்கு 7 நாட்களும் மின் இணைப்பு- 14 நாட்களும், குடிநீர் இணைப்புக்கு 7 நாட்கள் என்பதால், பொதுமக்களும், மேற்கண்ட சான்றிதழுக்கு காத்திருக்காமல் விரைந்து தங்கள் பணிகளை முடித்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications