பெரியார் நூலகத்தில் 'கண் திருஷ்டி' படம்! சமூக நீதி ஆட்சியா இது? நெட்டிசன்கள் சாடல்
கோயம்புத்தூர்: கோவை காந்திபுரத்தில் பெரியார் நூலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நூலகத்தின் கட்டிடத்தில் பெரிய 'கண் திருஷ்டி' படம் மாட்டப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் நுழைவு வாயிலிலும், கட்டிடத்தின் மேல்புறத்திலும் இந்த கண் திருஷ்டி படம் மாட்டப்பட்டிருக்கிறது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து பெரியார் தனது வாழ்நாள் இறுதி வரை போராடினார். ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதனின் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தில் மூட நம்பிக்கையின் சின்னமாக இருக்கும் கண் திருஷ்டி படம் அவசியமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்திருந்த அவர் "என்னுடைய கவனத்தில் அது இல்லை. நானே ஒரு பெரியாரிஸ்ட்தான். நான் பகுத்தறிவாளன். இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதில்லை. கட்டுமானத்துக்கு வரும் ஒப்பந்ததாரர்கள் எல்லாம் என்னை மாதிரியே பெரியாரிஸ்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
கட்டுமான ஒப்பந்ததாரர் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அடிப்படையில் கண் திருஷ்டி படத்தை வைத்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரையிலும் அரசை பொறுத்தவரையில் இப்படி எல்லாம் படங்களை வைக்க வேண்டும் என்று நாங்கள் எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடவில்லை. கட்டுமான பணி முடிவுற்ற பின்னர் இதையெல்லாம் நாங்கள் வைக்க மாட்டோம்" என்று விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக பெரியாரை தங்களது வழிகாட்டியாக திமுக ஏற்றுக்கொண்டிருந்தாலும், மத உணர்வுகளுக்கு இடமளித்து செயல்படும் அரசாகவே நாங்கள் தொடர்வோம் என்று கூறியுள்ளது. மதநல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் அரசாக இது இருக்கும் என ஆட்சியர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒப்பந்ததாரர் செய்த வேலைகளுக்கெல்லாம் அரசு மீது அரசு மீது எப்படி குற்றம்சாட்ட முடியும்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் இது விவாதமாக வெடித்த நிலையில், தற்போது கண் திருஷ்டி படம் அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் படம் அகற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட்டாலும், அரசுக்கு தெரியாமல் பல துறைகளில் மூட நம்பிக்கைகளை உயர்த்தி பிடிக்கும் நபர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் எனில், மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் அவசியம் என்று திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் விசிக இந்த கோரிக்கையில் உறுதியாக இருக்கிறது. அரசு இதற்கான சட்டத்தை இயற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications