ஜே.பி. நட்டா தமிழகம் வந்துள்ள நிலையில் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு.. 3 பேரிடம் விசாரணை
கோவை: கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பி ஆ ராசாவின் சனாதனம் தொடர்பான பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆ ராசாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இது தொடர்பாக போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி அதிலும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

ஜே பி நட்டா
அத்துடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடி நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்றார். இந்த நிலையில் கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சென்னை பாஜக தலைமை அலுவலகம்
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் ஒருவரை கைது செய்திருந்தனர். மோப்ப நாய் உதவியுடன் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது.

நீட் தேர்வு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக பேசியதால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பாஜக அலுவலகம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications