அமைச்சர் சம்பத்குமார் பெயரை சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. கோவையில் பரபரப்பு
கோவை: தவெக ஆட்சியமைத்து 2 மாதங்கள் ஆகப்போகிறது. திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை தவெக ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்களும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் என்று கூறி, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்பத்குமார் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு சென்ற ராகவேந்திரா, ஸ்ரீ ஜெயராம் என்கிற இருவர் தண்ணீர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். விதிகள்படி அப்படி கொடுக்க முடியாது என்று பெட்ரோல் பங்க் ஊழியர் பிரசாந்த் கூறியுள்ளார். அதற்கு ஆத்திரமடைந்த ராகவேந்திரா பெட்ரோல் பங்க் ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. அருகில் இருந்தோர் தடுத்த நிலையில் ராகவேந்திரா தொடர்ந்து தாக்கியுள்ளார்.

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்
நான் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர். என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பிரசாந்த் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் பிரசாந்த் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமைச்சரின் பெயரை சொல்லி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.
அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசு உரிய சட்டபூர்வ மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும். எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை.
சம்பத்குமார் விளக்கம்
பொதுமக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எவருக்கும் இந்த அரசு எவ்விதத்திலும் சாதகமாக இருக்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எந்தவொரு சூழ்நிலையிலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்பது திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்படுகிறது.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை மிகத் தீவிரமாகச் செய்யும். அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் "என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை வழக்குபதிந்து ராகவேந்திரா, ஜெயராம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications