வேஷ்டி – சட்டையில் பிரதமர் மோடி.. கோவை பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் உடை
கோவை: கோவையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்று கவனம் ஈர்த்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று தமிழகம் வந்தார்.

டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் கோவை வந்த பிரதமர் மோடி அங்கிருந்து காரில் விழா மேடைக்கு வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மோடியை வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி - சட்டை அணிந்து கவனம் ஈர்த்தார். பிரதமர் மோடி வேஷ்டி, சட்டை அணிவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை வேஷ்டி, சட்டை அணிந்து தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பொதுவாக தேர்தல் அல்லது பொங்கல், தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விழாக்காலங்களில் பிரதமர் மோடி வேஷ்டி, சட்டை அணிவது உண்டு. அந்த வகையில் இன்றும் அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையை தேர்வு செய்துள்ளார்.
முன்னதாக மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு, மத்திய இணையமைச்சர் எல் முருகன் பண்ணாரி மாரியம்மனின் போட்டோவை நினைவு பரிசாக வழங்கினார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட முக்கிய நிர்வாகிகள், கோவை, திருப்பூர் மாவட்டம் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பங்கேற்று இருந்தனர்.












Click it and Unblock the Notifications