அதிர்ந்த கோவை.. பைக்கில் சென்ற பெண்களிடம் நகை பறித்த போலீஸ் ஏட்டு.. அதிரடி காட்டிய காவல்துறை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்தவரான தர்மசாஸ்தா என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 58). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி நகர் பகுதியில் வந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர் மகேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

அதேபோல கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த அம்சவேணி என்பவரிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் குறித்தும் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீஸ் என்பது தெரியவந்தது. பொள்ளாச்சியை அடுத்து மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரி கிரி என்பவர் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். பெண்களிடம் நகை பறித்த வழக்கில் கைதான அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, போலீஸ் ஏட்டு சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications