கோவை போலீஸ் தேர்வு.. 10 நாள் கைக்குழந்தையுடன் வந்த கள்ளக்குறிச்சி பெண்.. நெகிழ வைத்த கணவர் செயல்
கோவை: கோவையில் போலீஸ் காவல் பணிக்கான உடற்தகுதி தேர்வுக்கு 10 நாள் கைக்குழந்தையுடன் வந்து கவனத்தை ஈர்த்துள்ளார் கள்ளக்குறிச்சி பெண். மனைவியின் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவாய் கணவன் வந்திருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இந்த எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார்கள். இந்த எழுத்து தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்டமாக உடற்தகுதி தேர்வு கோவை உள்பட தமிழகத்தின் 4 இடங்களில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வானது வருகிற பிப்ரவரி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏற்கனவே அவர்கள் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டிய தேதி மற்றும் இடம் ஆகியவை குறிப்பிட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கோவையில் பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அதேநேரம் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு கோவை பாப்பாநாயக்கன் பாளையத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 6ம் தேதியான நேற்று அதிகாலை 5 மணி முதலே சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வர்கள் குவிந்தனர். உடற்தகுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மைதானத்திற்குள் காவலர்கள் அனுமதிக்கவில்லை.
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் முதல் நாளில் 440 பெண்களுக்கு உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று 308 பேர் கலந்து கொண்ட நிலையில், 132 பெண்கள் பங்கேற்கவில்லை. கலந்து கொண்ட 308 பெண்களின் சான்றிதழ்கள் முதலில் சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. இதில் பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 159 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளுக்குள் ஓடி வர வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட வியாழக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் அவர்களுக்கு உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதனிடையே நேற்று கோவையில் நடந்த தேர்வில் போலீஸ் காவல் பணிக்கான உடற்தகுதி தேர்வுக்கு 10 நாள் கைக்குழந்தையுடன் வந்து கவனத்தை ஈர்த்தார் கள்ளக்குறிச்சி பெண். மனைவியின் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவாய் கணவன் வந்திருந்தார். கைக்குழந்தையை ஏந்தியபடி வந்த அந்த பெண், போட்டி தேர்வுக்கு பங்கேற்கும் முன்பு தனது கணவனிடம் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் காண்போரை நெகிழ வைத்தது.
இதனிடையே ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ள. இதில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதில் 320 பேர் மட்டுமே பங்கேற்றனர். 80 பேர் பங்கேற்கவில்லை. முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் உயரம் சரிபார்க்கப்பட்டது. இதில் பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்ச உயரமாக 170 செ.மீ. நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ. எனவும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு சோதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆண்களுக்கு 1,500 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. இதில் பந்தய இலக்கை அவர்கள் 7 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்று விதிமுறை பின்பற்றப்பட்டது. தொடர்ந்து 5 மீட்டர் உயர கயிறு ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு வியாழக்கிழமை அடுத்த கட்ட போட்டியாக உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீ, 200 மீ தூர ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications