Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒன்இந்தியா" செய்தியால் அம்பலம்! தமிழைவிட, சமஸ்கிருதத்திற்கு வாரி தந்த மத்திய அரசு! தலைவர்கள் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அள்ளிக் கொடுத்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள், கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு 2 ஆயிரம் கோடியும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் "ஒன்இந்தியாதமிழ்" தளத்தில் நேற்று வெளியானது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் உயர் கல்வித் துறை குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து செலவிட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மொழிகளுக்கும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் தகவல் பெற்றிருந்தார். அதில், கடந்த பத்து ஆண்டுகளில் 2013-14 முதல் 2022 - 2023 வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 2,435 கோடி ரூபாய் மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளதும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் அதாவது சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 7 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பிரத்யேகமாக ஒன்இந்தியாதமிழ் இணையதளத்தில் நேற்று வெளியானது.

Tamil Sanskrit Bjp

இந்த செய்தி வெளியான நிலையில், தமிழ் ஆர்வலர்கள் இடையே அது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியையும், அந்தந்த மாநில மொழிகளையும் வளர்க்கக்கூடிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் வரி வசூல் செய்து கொண்டு சமஸ்கிருதத்தை மட்டுமே இந்திய அளவில் வளர்ப்பேன் என்று மத்திய அரசாங்கம் பிடிவாதம் பிடிப்பதும், புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும், மக்களின் வரிப்பணத்தை சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே செலவு செய்யாமல் அனைத்து பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் செலவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து இங்கு காணலாம்.

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி: "மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருத மொழியை 22 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அம்மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. தங்களது மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என நினைத்துக்கொண்டு வடஇந்தியர்கள் இந்த செயலைச் செய்து வருகின்றனர். 21 தொலைக்காட்சி நிலையங்களில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆயிரம் பேருக்கு ஒரு தொலைக்காட்சி. ஆனால், யார் அதனைப் பார்க்கின்றனர், கேட்கின்றனர் என தெரியவில்லை.

Tamil Sanskrit Bjp

வடஇந்தியர்களின் பண்பாட்டு ரீதியான எதிரிகள் தமிழர்கள், திராவிடர்கள். அந்த வெறுப்புணர்வே இதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. பணம் செலவு செய்வதால் மட்டுமே ஒரு மொழி வளர்ச்சி அடையாது. சமஸ்கிருதத்துக்கு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. நமது மரபுகளைக் கொண்டாடுவது எனும் திட்டத்தின்கீழ் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியை ஒன்றிய அரசு இதனை செய்து வருகிறது. ஆரிய மொழிகள், திராவிட மொழிகளுக்கான முரண்பாடு நீண்டகாலமாக நிலவி வருகிறது. அதனை அனுசரித்துதான் பண்டைய காலத்தில் இருந்தே தொல்காப்பியர் முதல் தமிழ் மொழியில் சமஸ்கிருதத்துக்கு மதிப்பளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்த ரீதியில் தற்போது இம்மொழிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர் என்பது தெரியவில்லை.

ஹிந்தி மொழிக்கும் கூடுதலாகவே செலவு செய்து வருகின்றனர். ஹிந்தி வளர்ச்சியடையாத மொழி, அதில் அறிவியல் சொற்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நீண்டகாலத்துக்கு முன்னரே தமிழ் மொழிக்கான அறிவியல் சொற்கள் கொண்டு வரப்பட்டுவிட்டன. இத்தனை கோடி மக்கள் பேசினால் இவ்வளவு தொகை என்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதே சரியாக இருக்கும். சமஸ்கிருத மொழிக்கு 2 ஆயிரம் கோடி செலவு செய்வதை எந்தவகையில் எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. இது ஒன்றிய அரசின் தான்தோன்றித்தனமான ஆணவப் போக்கு மற்றும் பகைமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது" என்றார்.

திமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: "ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்திருக்கம் துரோகத்தை பலமுறை திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டி உள்ளது. இதனை உணர்ந்துதான் தமிழக மக்கள் பாஜகவுக்கு தேர்தலில் தக்க பாடத்தைப் புகட்டினர். செத்துப்போன சமஸ்கிருத மொழிக்காக 10 ஆண்டுகாலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறார்கள் என்பது, ஆர்எஸ்எஸ் இன் அஜந்தாவை நிறைவேற்றுவதில் பாஜக மோடி அரசு எந்தளவுக்கு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக்குகிறது.

Tamil Sanskrit Bjp

பாஜக அரசு நாட்டுக்காகவும், மக்களுக்காவும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதில்லை. இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் இன் அஜந்தா இவை இரண்டையும் பூர்த்தி செய்வதற்காகவே ஆட்சியில் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல, பட்ஜெட்டிலும் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையையே புறக்கணித்திருக்கிறார்கள். இந்தியாவில்தான் நம் மாநிலம் உள்ளதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அரசுக்கு அதிகமான ஜிஎஸ்டி, வருமான வரி மூலமாக அதிக அளவில் வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், மக்களின் வரிப் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தமிழக மக்களை வஞ்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது மிகப்பெரிய துரோகம்" என்றார்.

Tamil Sanskrit Bjp

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும், அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் சமமாக பாவித்து, அதன் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சமவாய்ப்பை அளிக்க வேண்டும். சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட பல செம்மொழிகள் உள்ளன. ஆனால், சமஸ்கிருத மொழியை பேசக்கூடிய மக்கள் மிகமிக குறைவு. தமிழ் மொழியை பேசும் மக்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் உள்ளனர். சமஸ்கிருதத்துக்கு மட்டுமே தொடர்ந்து அதிகபட்சமான தொகையை மத்திய அரசு ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிறது. தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகையின்போது தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் பெருமையாக பேசுவதும், ஒடிஷாவுக்கு சென்றால் தமிழர்களை திருடர்கள் என்று சொல்வதும் என தொடர்ந்து தமிழர்களை இழிவுபடுத்தும் செயலைத்தான் ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்கிறது. இது ஒரு நாட்டினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு தீங்குவிளைவிக்கும் நடவடிக்கையாகும். எனவே, இதுபோன்ற மொழி அரசியலை மேற்கொள்வதைத் தவிர்த்து அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+