நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: 9 பேர் கோர்ட்டில் ஆஜர்.. வீடியோ ஆதாரம் ஆய்வு
கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ஏராளமான பணம் பறித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு அதிர்ச்சி புகார் எழுந்தது. 2019 பிப்ரவரி 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த மிகப்பெரிய குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது.

பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி துன்புறுத்திய வழக்கில் திருநாவுக்கரசு என்பவர் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2021-ல் 9 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது. திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். சேலம் மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட 9 பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் வீடியோ ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளதாகவும், அதுதொடர்பாக ஆய்வு நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications