ரூபாய் 5 லட்சம் கொடுத்தால் ரூபாய் 10 லட்சம் - காகித கட்டுகளை கொடுத்து மோசடி செய்த கேரளா நபர் கைது!
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூபாய் 5 லட்சம் கொடுத்தால் ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறி, காகித கட்டுகளை கொடுத்து மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவரது செல்ஃபோனில் பேசிய கேரளா மாநிலம் மேனம் பாறை பகுதியை சேர்ந்த சண்முகன் என்பவர், தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் ஒரு தொகை கொடுத்தால் இரண்டு தொகையாக கொடுப்பதாக ராஜேந்திரனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி ராஜேந்திரன், கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதியில் காத்திருந்த சண்முகனிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சண்முகம் திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மீண்டும் ராஜேந்திரனுக்கு செல்ஃபோன் மூலம் பேசிய சண்முகம், 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்தால், 10 லட்ச ரூபாய் கொடுப்பதாக மீண்டும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ராஜேந்திரன், சண்முகனின் வலையில் சிக்கும் வகையில், 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது ராஜேந்திரன் கொண்டு வந்த 5 லட்சம் பணத்தை சண்முகனிடம் கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக பெரிய பிளாஸ்டிக் கவரில் 10 லட்சம் ரூபாய் பணம் இருப்பதாக கூறி சண்முகம் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டில் சென்ற ராஜேந்திரன், ஆசையுடன் பிளாஸ்டிக் கவரை பிரித்து பார்த்தபோது பணத்துக்கு பதிலாக கட்டுக்கட்டாக வெற்றுக் காகித கட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக ராஜேந்திரன் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தனிப்படை அமைத்து மோசடி செய்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று கோவை மதுக்கரை பகுதியில் சண்முகன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார், சண்முகத்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 5 லட்ச ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சண்முகன், இதேபோன்று பல்வேறு பகுதியில் பணம் மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!