தாயகம் திரும்பிய தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்! கோவையில் மலையகம் அமைப்பு மாநாடு
கோவை: தாயகம் திரும்பிய தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றி பேசுவதற்காக, மலையகம் அமைப்பு சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் ஆ.ராசா எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே மலையகம் 200 -பன்னாட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
*சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு இந்திய ஒன்றிய அரசு இந்தியக் குடியுரிமையை வழங்கவேண்டும்
*தாயகம் திரும்பியோரது வாழ்நிலை அறிய தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்திடவேண்டும்
*அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படவேண்டும். தாயகம் திரும்பியோரில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோரின் நிலங்களுக்கும் வீட்டு மனைகளுக்கும் பட்டா வழங்கவேண்டும்
*புனர்வாழ்வு திட்டத்தின்கீழ் 1984க்கு முன்பாக தாயகம் திரும்பியோருக்கு அரசு வழங்கிய வீட்டுக் கடனை இரத்து செய்ததுபோல் 1984க்கு பிறகு வாங்கியவர்களின் வீட்டுக்கடனையும் இரத்துசெய்யவேண்டும்
*மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த மக்கள் சமூகம் என்று இலங்கை அரசு சட்டவகையில் அங்கீகரிக்கவேண்டும். கடந்த இரு நூறாண்டுகளில் ஆங்கிலேய அரசால் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் அனைவரையும் மலையகத் தமிழர்களாக வரையறுக்க வேண்டும்.
*இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டின் மூலம் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
*பெருந்தோட்ட பொருளாதார மேம்பாட்டை மையமாக கொண்டு மலையகத்தில் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும்
*மலையக மக்களுக்கு காணி உரிமையும் வீட்டுரிமையும் வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்.
*இலங்கையில் உள்ள ஏனைய இனச் சமூகங்களைவிட அனைத்துவகையிலும் பின் தங்கியுள்ள மலையக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்த பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு இலங்கை, இந்திய, ஆங்கிலேய அரசுகள் முன்வர வேண்டும்.












Click it and Unblock the Notifications