கூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிகிறது
Recommended Video
கோவை: ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் பாட்டிக்கு தொடர்ந்து பாராட்டுக்களும், உதவிகளும் குவிந்து வருகின்றன.
இப்பவெல்லாம் ஒரு இட்லி குறைந்தது 5 ரூபாயாவது விற்கிறார்கள். இதுவே ஸ்டார் ஓட்டல்களில் 50 ரூபாய்க்கும் விற்கிறார்கள்.
ஆனால் யார் எப்படியாவது விற்று கொள்ளுங்கள், நான் இப்படித்தான் விற்பேன் என்கிறார் கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. வயது 85 ஆகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார்.
யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்துகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் செய்கிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றாராம். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி உள்ளார்.
சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது.. மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது.. சட்னி அரைக்க மிக்சி கிடையாது.. எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான்! சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடிகாலையிலேயே தயாராகிறது. இவரது இந்த கைப்பக்குவத்துக்கு மாணவ, மாணவிகள் முதல் ஆபீஸ் போகும் நபர்கள் வரை ரெகுலர் கஸ்டமர்கள். ஒருநாளைக்கு 200 பேர் சாப்பிட வருகிறார்களாம்.
இந்த பாட்டியின் வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகிறது. இதை பார்த்து, பலரும் உதவி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் முதல், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரை இந்த பாட்டிக்கு உதவ தயார் என்று சொல்லி வாழ்த்தையும் பதிவிட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டரும் ராசாமணி நேரில் கூப்பிட்டு வாழ்த்தும் தெரிவித்தார்.
பாட்டிக்கு இப்போது காஸ் அடுப்பு, கிரைண்டர் கிடைத்துவிட்டது. ஆனால் எப்படி அதை பயன்படுத்துவது என்று தெரியவில்லையாம். போக போக பழகிக்கிறேன் என்று சொல்கிறார் இந்த பொக்கை வாய் பாட்டி கமலாத்தாள்!