"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை
கோவை: "கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது? அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து விஜய் நீக்க வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்கள் மீது போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பான புகார்கள் அதிர்ச்சியாக உள்ளன. இதுகுறித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி ஆகியோர் கோவையை சேர்ந்தவர்கள்.

முதலமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும். மதுபோதை இல்லாத ஆட்சி என்பதை தான் முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. எனவே, ஆதவ் அர்ஜுனா தவெக அமைச்சரவையில் இருப்பது முறையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த விவகாரத்தில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விஜய் நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் மவுனம் சாதிக்கக்கூடாது. கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசும் முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ விசாரணையும் வேண்டும்.
தமிழ்நாட்டில் தூய ஆட்சி நடக்க வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும். லீமா ரோஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது? அவரையும் அ.தி.மு.க நீக்க வேண்டும். இது போன்று உறவினர்கள் மீது குற்றச்சாட்டு வரும் போது ஆதவ் அர்ஜுனா அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, லீமா ரோஸ் மார்ட்டினின் சகோதரர் ஜான் பிரிட்டோ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். போதைப்பொருட்கள் தொடர்பான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ தான் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜான் பிரிட்டோ எனும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கும், எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. என்னிடம் மத்திய மாநில அரசுகளை சார்ந்த எந்த ஒரு புலனாய்வு நிறுவனமும், எந்த காலத்திலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, எந்த ஒரு விசாரணையும் செய்தது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications