ராகிங்: கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்! தலைமறைவான மாணவருக்கு வலை!
கோவை: கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேருக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கோவை பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்தும் கோவை விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ. தூரத்தில் இந்த கல்லூரி உள்ளது. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள், பெண்களுக்கான மாணவர்கள் விடுதியும் உள்ளது.
இந்த கல்லூரியில் கடந்த 6ஆம் தேதி முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் 7 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக போலீஸாரால் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி 7 மாணவர்களும் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 30 நாட்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்பவர் 10 நாட்களாகியும் தொடர்ந்து அந்த மாணவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications