சார் சார்.. மின்கட்டண உயர்வு குறித்த கேள்வி.. நைசாக எஸ்கேப்பான ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்! யார் இவர்?
கோவை: தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் மின்கட்டணம் உயர்வு குறித்த கேள்வி கேட்டதுமே பத்திரிகையாளர்களை சந்திக்காமல் கோவையில் வேகவேகமாக காரில் ஏறி டேன்ஜெட்கோ தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் என்பது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 15ம் தேதி வெளியிட்டது. அதன்படி குறைந்தபட்சமாக ரூ.20 பைசா முதல் அதிகபட்சமாக ரூ.27 பைசா வரை மின்கட்டணம் என்பது அதிகரித்துள்ளது.

இந்த மின்கட்டண உயர்வு என்பது ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனி மின்கட்டணம் செலுத்தும்போது மக்களுக்கு புதிய கட்டணம் என்பது வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் தற்போதைய மின்கட்டண உயர்வால் இதுவரை நாம் 400 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 செலுத்தினோம். இனி அந்த கட்டணம் ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401 - 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 501 முதல் 1000க்கு மேலாக பயன்படுத்துவோரின் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை பொறுத்தவரை ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதனால் ஆளும் கட்சியான திமுகவுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மின்கட்டண உயர்வால் தங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படும் என்று சிறு, குறு வணிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்படி மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மின்கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் தான் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் சோலார் பேனல் தொடர்பான ஆய்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான ‛டேன்ஜெட்கோ' தலைவர் ராஜேஷ் லக்கானி பங்கேற்றார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் ராஜேஷ் லக்கானியை பார்த்த பத்திரிகையாளர்கள் அவரிடம், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்வியை எழுப்பினர். பத்திரிகையாளர்கள் இந்த கேள்வியை கேட்டதும் அவர் பதிலளிக்க மறுத்து வேகவேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications