குழந்தைகள் முதல் மூதாட்டி வரை.. தொடரும் பாலியல் வன்முறை.. இனியும் ஆடையை காரணம் கூற முடியுமா?
கோவை: மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை, உத்தரகாண்ட் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைக்குள் வைத்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை, கேரளத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளி இருவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் என்று நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
பாலியல் துன்புறுத்தலில் குழந்தைகளும் விதிவிலக்கு இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது மகாராஷ்டிர மாநில சம்பவம். மருத்துவமனை கல்வி நிறுவனங்கள், பேருந்து, வீடு, பொது இடம் என அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு சம்பவமும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன

இந்நிலையில், எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் அதற்கு பெண்களை மட்டுமே குற்றம்சாட்டும் மனப்போக்கும் சமூகத்தில் அதிகரித்துள்ளது. அதிலும் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து விமர்சனமே பிரதானமாக வைக்கப்படும். அடிப்படையில் இப்பிரச்னைக்கு ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து, குழந்தைகள் நல செயல்பாட்டாளர் தேவநேயன் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் எதற்கெடுத்தாலும் பெண்கள் மீதே குற்றம் சுமத்துவார்கள். அந்த ஆணின் வக்கிர புத்தியை, கொடூர செயலை எங்கும் கேட்க மாட்டோம். 2 வயது குழந்தை தொடங்கி 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளில் சிக்குகிறார்கள்.
அவர்களின் உடை மோசமாக இருந்தது, அதனால்தான் நேரிட்டது என்று சொல்லி குழந்தையையோ, மூதாட்டியையோ விமர்சிக்க முடியுமா. பெண்கள், குழந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நாம், ஆண் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம். இதன் மொத்த வடிவம் தான், பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் காரணம் என்ற முடிவுக்கு வந்து நிற்கிறார்கள். ஆண், பெண் உள்பட சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஆனால் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கும் அவலம் நிலவுகிறது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாலியல் வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பாலியல் வழக்குகள் பதிவாவது குறைவாக உள்ளது. வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படுவது வரவேற்கத்தக்கதுதான். அதேநேரத்தில் எத்தனை வழக்குகளில் தண்டனை கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பதிவாகியுள்ள சுமார் 4,500 வழக்குகளில் 16 சதவீதம் தான் தண்டனை கிடைத்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமைக்கு அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையும் ஒரு காரணம். பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து சொன்னாலும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. இதுபோன்று நடக்கும் சம்பவங்களில் 30 சதவீதம் தான் வழக்காகப் பதிவு செய்யப்படுகின்றன. மீதி சம்பவங்களில் வெளியில் தெரிந்தால் அசிங்கம் ஆகிவிடும் என்று எண்ணியே வெளியில் சொல்ல பயப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் அதோடு நிற்காமல், அடுத்தடுத்து பாலியல் வன்முறைகளிலும் துணிந்து இறங்கும் நிலை ஏற்படுகிறது.
பாலியல் குற்றங்களை வெறும் வழக்காகப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் கடும் தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை உறுதி செய்தால் மட்டுமே குற்றங்கள் தடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications