கோவை அருகே வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்.. திக் திக் நிமிடங்களை விவரிக்கும் உயிர் தப்பியோர்!
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 2 கார்கள் மழைநீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள், திக் திக் நிமிடங்களை விவரித்துள்ளனர்.
கோவையை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வெயில் அடித்த நிலையில் மாலை முதல் கனமழை பெய்ய துவங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை ரயில் நிலையம் சாலை, மருத்துவமனை சாலை, சுங்கம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கோவை லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம், சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.
அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் தொடங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஏழு எருமை பள்ளம் பகுதியில் இருந்த இரு கார்கள் மழைநீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டன.

இதை அறிந்து அந்த இடத்திற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அந்த கார்களை மீட்டனர். கார்களில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். வெள்ளத்தில் கார்கள் சிக்கிய நிலையில், அதில் இருந்து மீட்கப்பட்ட 5 பேர், திக் திக் நிமிடங்களை விவரித்துள்ளனர்.
கோட்டைப்பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ரவிக்குமார், அவரது மகள் ஜெனிபர் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட காரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். குழந்தையை கார் கண்ணாடி வழியாக வாங்கிக்கொண்ட மக்கள், பின்னர் வரிசையாக நின்று கையைப் பிடித்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ரவிக்குமார் கூறுகையில், "கோட்டைப்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊசி போடுவதற்காக அவசரமாக போக வேண்டிருந்ததால் கிளம்பினோம். மழைநீர் அதிகமாக சென்றுகொண்டிருந்தாலும், போய்விடலாம் என நினைத்து சென்றுவிட்டோம். பாதியில் வந்து மாட்டிக்கொண்டோம். காருக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தோம்.
இப்பகுதி மக்கள் எங்களுக்கு உதவிய நிலையில், அவர்களின் உதவியோடு வெளியில் வந்துவிட்டோம். அந்த இருட்டில் எங்களை காப்பாற்றியது யார் என்று அடையாளம் காண முடியவில்லை. காப்பாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களால் தான் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்." என உருக்கமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications