கோவையை பதறவைக்கும் "ரோலக்ஸ் யானை".. மயக்க ஊசி போட வந்த மருத்துவரை தாக்கியதில் படுகாயம்
கோவை: கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களை ஒற்றை யானை ரோலக்ஸ் சேதப்படுத்தி வந்தது. இந்த யானையைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, யானையை வனப் பகுதிக்குள் விட வனத் துறையினர் முடிவு செய்திருந்த நிலையில், மயக்க ஊசி போட வந்த கால்நடை மருத்துவரை ரோலக்ஸ் யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டு யானைகள்
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது. போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளால் பயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.

பயிர்கள் சேதம்
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'ரோலக்ஸ்' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரோலக்ஸ் யானை பிடிக்கும் பணி
ரோலக்ஸ் யானையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த 'ரோலக்ஸ்' காட்டு யானையை இடமாற்றம் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததை தொடந்து, அந்த யானையை பிடிப்பதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளியூர் வந்த கும்பிகள்
ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் கடந்த வாரம் அழைத்து வரப்பட்டன. இந்த யானைகள் தாளியூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயக்க ஊசி
ரோலக்ஸ் யானை கடந்த வாரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், யானை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது.
தோட்டத்தில் ரோலக்ஸ்
இதைத்தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக நாள்தோறும் இரவு பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள வாழை தோட்டத்தில் ரோலக்ஸ் யானை இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவரை தாக்கிய யானை
அந்த தகவலின்பேரில் வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், வெண்ணிலா மற்றும் மனோகரன் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்து வந்தனர். அப்போது வாழை தோட்டத்தில் இருந்து வெளிவந்த யானைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். அப்போது திடீரென அந்த யானை மருத்துவர் விஜயராகவனை நோக்கி வந்து அவரை தும்பிக்கையால் கீழே தள்ளி தாக்க முயன்றது.
மருத்துவர் விஜயராகவனுக்கு சிகிச்சை
உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள் சப்தம் எழுப்பி யானையை விரட்டி மருத்துவரை மீட்டனர். தொடர்ந்து வனத்துறை வாகனம் மூலம் அவரை அழைத்து வந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் விஜயராகவனுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
யானை தும்பிக்கையால் தாக்கியதில் விஜயராகவன் முதுகில் லேசான எலும்பு முறிவும், இடது கை விரலில் காயமும் ஏற்பட்டுள்ளது. காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற மருத்துவரை யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications