கோவை மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சிட்டி சென்டரில் வருது ரவுண்டானா.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், நகரின் முக்கியப் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படவுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தொழில் நகரமாக விளங்கும் கோவை மாவட்டத்துக்கு மருத்துவம், கல்வி, தொழில், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மாணவ, மாணவிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதனால், மாவட்டத்தில் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து காணமாக மாநகரில் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. கோவை மாநகர காவல் துறையானது, கோவை மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகனப் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து விஞ்ஞான முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து அதை கருத்தில் கொண்டும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எளிதாகவும், காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்தும் செல்வதற்கு வசதியாக முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களை பல இடங்களில் நீக்கி அதற்குப் பதிலாக "U" வளைவுகள் மற்றும் ரவுண்டானாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து சீரமைப்பு பணியின் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிச் செல்லும் பழைய தபால் அலுவலக சாலை ஓசூர் சாலை மற்றும் பந்தய சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும் சாலை ஆகியவை சந்திக்கும் செஞ்சிலுவைச் சங்கம் சந்திப்பில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையரின் அறிவுரையின் பேரில் போக்குவரத்து காவல் துறையினரால் புதிதாக தற்காலிக ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் சாலை ஸ்டேட் பேங்க் சாலை மற்றும் பழைய தபால் அலுவலக சாலை வழியாக நீதிமன்றம் செல்வோர் மேற்படி ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி நீதிமன்ற வளாகத்திற்கு எளிதில் செல்லலாம். பந்தய சாலை மற்றும் அரசு கலைக் கல்லூரி சாலையிலிருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி ஓசூர் ரோடு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேற்படி தற்காலிக ரவுண்டானாவின் பலன்களை தொடர்ந்து கண்காணித்தும், பொதுமக்களின் கருத்துகளை அறிந்த பிறகும் இந்த ரவுண்டானாவில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி செயல்படுத்தப்படும். எனவே, இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாநகர போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications