அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.. ஆனா 234 தொகுதிகளையும் எதிர்பார்க்கிறோம்.. குழப்பும் சரத்குமார்
கோவை: இம்முறை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட எண்ணுகிறோம் என அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் ஆறு வழிச்சாலையில் இணைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

போட்டிகள்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வருகின்ற தேர்தலில் கூட்டணியில் 234 தொகுதிகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பதை அறிவிப்போம்.

பட்ஜெட்
தற்போது அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இந்த பட்ஜெட் பயனளிக்குமா என்பதற்கு காலம் தான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வேல் தூக்குவது பேஷன்
மேலும் இன்றைய சூழலில் வேலை தூக்குவது ஒரு பேஷனாகி விட்டது என்று தெரிவித்தார். மேலும் வருகின்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். சசிகலா வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தற்போது தெரியாது என்றும் அவர் கூறினார்.

234 தொகுதிகள்
கடந்த 2011 ஆம் ஆண்டு இரு தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். இந்த முறை சற்று தொகுதிகளை அதிகம் கேட்கவுள்ளதாக சரத்குமார் கூறி வந்த நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications