"இருக்கு ஆனா இல்லை".. திறக்கப்படாத செம்மொழிப் பூங்கா.. கோவை மக்கள் ஏமாற்றம்
கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார். இந்தப் பூங்கா டிசம்பர் 1 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் முழுமையடையாததால் சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசரக் கதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திறப்பு தேதி தள்ளிப் போயிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பதாக முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டது.

23 வகை தோட்டங்கள்
அதனைத்தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.
ரோஜா தோட்டம்
மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவுவாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் வசதி
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத்தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் திடல்
4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல். சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூங்கா திறப்பு தள்ளிவைப்பு
பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த பூங்கா கடந்த 25 ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு விடும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவசர கதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திறப்பு தேதி தள்ளிப் போயிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இறுதிகட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications