ஸ்டாலினிடமே துணிச்சல் பேச்சு.. கோவையில் கணபதி ராஜ்குமார்.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி வைத்த செக்
கோவை: கோவை லோக்சபா தொகுதியை கூட்டணிக்கு திமுக தராமல் போனதற்கான விடை கணபதி ராஜ்குமார் களம் இறக்கப்பட்ட பின்னரே தெரியவந்துள்ளது. அதேபோல் செந்தில் பாலாஜி போல் அதிமுகவில் இருந்து வந்துள்ள கணபதி ராஜ்குமாரை ஸ்டாலின் எதற்காக வேட்பாளராக அறிவித்தார் என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த முறை லோக்சபா தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த 21 தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும் நேற்றிலிருந்து பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக கோவை தொகுதி அதிக பேசுபொருளாக உள்ளது. இதற்கு காரணம் கோவை தொகுதியில் திமுக 28 வருடங்களுக்கு பிறகு ஜெயிக்க விரும்பி நேரடியாக களம் இறங்கி இருப்பது.. அதேபோல் அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.. அடுத்ததாக அதிமுகவில் இருந்து வந்த கணபதி ராஜ்குமாருக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது போன்றவை தான் பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

கோவையில் எத்தனையோ திமுக நிர்வாகிகள் இருக்கும் போது, எதற்காக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கணபதி ராஜ்குமாரை ஏன் ஸ்டாலின் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. கணபதி ராஜ்குமார் யார் என்றால், ஒரு காலத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவராக இருந்தார்.. கோவை மாநகராட்சியில் மேயராக இருந்தவர் தான் கணபதி ராஜ்குமார்.. இவர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவரை பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.. அதன்பின்னர் கோவை உள்பட கொங்கு மண்டலம் மொத்தமும் எஸ்பி வேலுமணியின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது எஸ்பி வேலுமணியின் அரசியலால் பாதிக்கப்பட்ட கணபதி ராஜ்குமார், கடும் அதிருப்தியில் இருந்தார். இதனிடையே செந்தில் பாலாஜி உடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவருடைய ஆதரவுடன் கடந்த 2020ல் திமுகவில் இணைந்தார்.
2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவால், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.. எஸ்பி வேலுமணியின் அதிரடி வியூகத்திற்கு ஈடுகொடுக்க கோவையில் சரியான ஆள் இல்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின், உடனடியாக செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.அவருக்கு எஸ்பி வேலுமணியின் அத்தனை வியூகங்களும் தெரியும் என்பதால் , அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது, கோவை மாவட்டத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. கோவை மேயர் பதவியையும் திமுக கைப்பற்றியது.
இதனிடையே கொங்குமண்டலத்தில் திமுகவின் வலுவான தலைவராக மாறிய செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மறுபடியும் கோவையில் வெற்றிடம் ஏற்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஆலோசனையின் பேரில் கோவையில் வேட்பாளர் தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரான அதிமுகவில் இருந்த வந்த கணபதி ராஜ்குமாரை ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்துள்ளார். கோவையில் மகேந்திரன் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பந்தமே இல்லாமல் கணபதி ராஜ்குமார் களம் இறக்கப்பட்டதன் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக கூறப்படுகிறது.
கணபதி ராஜ்குமார் சென்னை அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற போது, கோவை தொகுதியில் கள நிலவரத்தை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். அதன்பிறகே கூட்டணிக்கு தராமல் கோவை தொகுதியை வாங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரது பேச்சை கண்டு வியந்த ஸ்டாலின், வேலுமணி, அண்ணாமலைக்கு செக் வைக்க இவர் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து களம் இறக்கி உள்ளாராம்.












Click it and Unblock the Notifications