விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போட்டியிடும் அம்மன் அர்ஜுனன், விஜயபாஸ்காருக்கு பயந்து செந்தில் பாலாஜி கோவை வந்துள்ளார். தில் இருந்தால் அவர் சொந்த ஊரில் நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது திமுகவுக்கும், அதிமுகவுக்குமான போட்டி. இதில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி. போதையில்லா தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை அவர் கொடுப்பார். எடப்பாடியாரின் ஆட்சி எப்போது வரும் என்று மக்கள் ஆவலுடன் இருக்கிறார். அந்த ஆசையை அவர் நிறைவேற்றுவார்.

செந்தில் பாலாஜிக்கு காய்ச்சல்
மக்களை பார்த்துதான் வேலை செய்கிறோம். கரூரில் எங்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டு செந்தில் பாலாஜி பயந்து கோவை வந்துள்ளார். என்னுடைய சொந்த தொகுதி வேண்டுமென்று கேட்டு தானே நான் கோவை தெற்கு தொகுதிக்கு வந்துள்ளேன். செந்தில் பாலாஜி தில்லானவராக இருந்திருந்தால் ஏன் சொந்த தொகுதியை விட்டு வரவேண்டும். கரூரில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவித்தவுடன் அவருக்கு ஜுரம் வந்துவிட்டது.
ஆகா.. இது சின்ன தொகுதி. மக்கள் ஏமாளிகள். டப்பா.. பாக்ஸ் எதையாவது கொடுத்து வென்றுவிடலாம் என்று நினைக்கிறார். கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும், அவர்களை அடித்து விரட்டவும் தெரியும். செந்தில் பாலாஜிக்கு எதிராக நான் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இங்கு அவருக்கு இடமில்லை. முதலில் கோவை திமுகவினர் அவருக்கு ஒத்துழைப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
மக்கள் தேர்வு யார்
கோவையில் பட்டி ஷெட் போடுவதற்கு இடமில்லை. இங்கு எப்போதும் மக்களுடன் மக்களாக நின்று சேவை செய்பவர்களை தான் மக்கள் தேர்வு செய்வார்கள். இங்கு உலகநாயகன் கூட போட்டியிட்டார். அவரால் வெற்றி பெற முடிந்ததா. இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. மக்களுக்கான அன்றாட தேவைகளை அனுசரித்து செல்பவர்களை தான் தேர்வு செய்வார்கள். ஓட்டு வாங்கி சென்னை சென்று உட்காருபவர்களை தேர்வு செய்யவே மாட்டார்கள்.
இது ஸ்டார் தொகுதி என்று ஊடகங்கள் தான் சொல்கின்றன. அப்படி எல்லாம் இல்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தனித்து நின்ற நான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்தமுறை தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்துடன் நிற்கிறேன். அதனால் தான் 3 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறேன். மே 4 ஆம் தேதி பார்க்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications