குட்டி ஜப்பானாக மாறப்போகும் கோவை!.. செந்தில் பாலாஜியின் பக்காவான திட்டம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். செந்தில் பாலாஜி, என் வாழ்வின் எஞ்சிய நாட்களை கோவை தெற்கு தொகுதிக்காக அர்ப்பணிக்கவுள்ளேன். இந்த தொகுதியை குட்டி ஜப்பானாக மாற்றுவேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சிவானந்தா காலனியில் நேற்று மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர், "2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் வெற்றி வெற்றியை கொடுக்காவிட்டாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு அதிகமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். கோவைக்கு ரூ.21,000 கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தினார்.

குட்டி ஜப்பான்
செம்மொழி பூங்கா கோவையின் அடையாளமாக இருக்கிறது. ஜி.டி.நாயுடு மேம்பாலம், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரியார் நூலகம், மேற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிட்டுள்ளது. அதை மீண்டும் செயல்படுத்துவோம். புதிய ஒருங்கிணைத்த பேருந்து நிலையம் கொண்டு வருவோம்.
கோவை தெற்கு தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன். குட்டி ஜப்பனை போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். இதற்காக ரூ.1 லட்சம் கோடியில் கோவையில் திட்டங்களை நிறைவேற்றுவோம். தொகுதியில் உள்ள அடிதட்டு குடும்பத்தில் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு வருடம் ரூ.25,000 உதவித்தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூ.10,000 உதவி தொகை வழங்கப்படும்.
கோவைக்கு அர்ப்பணிப்பு
போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவசமாக படிக்க மகத்தான திட்டத்தை வழங்கவுள்ளோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கோவை தெற்கு தொகுதியில் ஒரு வார்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கு மக்களின் குறைகள் கேட்டு மக்களுக்காக பாடுபடுவேன். என் இதயத்தின் அடிதளத்தில் இருந்து இதை சொல்கிறேன்..
கரூரில் என்னுடைய 30 வருட அரசியல் வாழ்வை அர்ப்பணித்தேன். எஞ்சிய நாட்களை கோவை தெற்கு தொகுதி மக்களுக்காக அர்ப்பணிப்பேன். கோவை தெற்கு என்னுடைய முகவரியாக இருக்கும். கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இருக்கும். கோவை தெற்கின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன்.
அழைக்கலாம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தொகுதியில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாக சென்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை எனக்கு கொடுக்க வேண்டும். அனைவரும் என்னுடைய எண்ணை வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது தேவை என்றால் என்னுடைய எண்ணிற்கு அழைக்கலாம். உடனடியாக பதில் தருவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications