கோவை நிரந்தரம்.. செந்தில் பாலாஜியின் பக்கா மாஸ் திட்டம்.. திமுக வேற லெவல்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவான நிலையில், நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவையின் நிலவரத்தையும் உற்று கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையை மையப்படுத்தில் செந்தில் பாலாஜி செய்யும் பணிகளை பார்த்து திமுகவினரே ஆச்சர்யபடுகிறார்கள். செந்தில் பாலாஜியின் முகவரியாக இனி கோவை தான் இருக்க போகிறதாம். என்ன செய்ய போகிறார்.
சட்டமன்ற தேர்தலில் கோவை தேர்தல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி கோவை வருகை
இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கினார். கோவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் செந்தில் பாலாஜியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
தேர்தலுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் குடியேறினார். கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் வெற்றி பெற வைப்பதற்காக பணியாற்றினார்கள். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கோவை அதிமுக கோட்டையாக தொடருமா அல்லது திமுகவின் கோட்டையாக மாறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் திட்டங்கள்
கொங்கு மண்டலத்தில் திமுக இந்தமுறை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 5-6 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு செந்தில் பாலாஜி வேலை செய்துள்ளார்.
இது இந்த தேர்தலுடன் நின்றுவிட போவதில்லை. செந்தில் பாலாஜியின் நிரந்தர முகவரியாக கோவை மாறவுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே அவர் கோவை தெற்கு தொகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு குடியேறினார். கோவையில் அவருக்கு ஏற்கனவே கொடிசியா பகுதியில் ஒரு வீடு உள்ளது. கோவை வந்தால் அங்கு தான் அவர் சந்திப்பார்.
வீடு மாற்றம்
கட்சி தொடர்பான சந்திப்புகள், ஆலோசனை கூட்டங்களும் அங்கு தான் நடைபெறும். அப்படியிருக்கும்போது அவர் கோவை மாறிய பின்னணியில் பல அரசியல் கணக்குகள் உள்ளனவாம். கோவையின் இதய பகுதியாக உள்ள ரேஸ்கோர்ஸை ஒரு பவர் சென்டர் என்ற கூறலாம். மாவட்டத்தில் உள்ள பல விவிஐபிகள் அங்கு குடியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஐஜி, மாவட்ட வருவாய் அலுவலர், டிஐஜி, துணை ஆட்சியர், மாவட்ட நீதிபதி, அரசு விருந்தினர் மாளிகை அங்கு தான் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் அலுவலகங்களும் அதற்கு அருகில் தான் உள்ளன.
கோவை நிரந்தரம்
கோவையின் தவிர்க்க முடியாத பவர்சென்டராக வருவதற்காக தான் ரேஸ்கோர்ஸில் செந்தில் பாலாஜி குடியேறியுள்ளாராம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, இனி வாழ்நாள் முழுவதும் கோவை மக்களுக்காக பணியாற்றுவேன் என்பதை பலமுறை சூசகமாகவும், சில இடங்களில் உருக்கமாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளுக்கும் செந்தில் பாலாஜிக்கு தனித்தனி எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. அவிநாசி சாலையில் திமுக கட்சிக்கு மிகப்பெரிய அலுவலகம் அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். தேர்தலுக்கு பிறகும் கோவை அரசியலில் பரபரப்பு தொடரும் என்றே தெரிகிறது.













Click it and Unblock the Notifications