என்னை ஒன்றும் செய்ய முடியாது! தொழில் செய்தால் இது சகஜம்! ஐடி ரெய்டு பற்றி செந்தில் கார்த்திகேயன்!
கோவை: தொழில் செய்தால் வருமான வரித்துறை ரெய்டெல்லாம் சகஜமானது என்றும் தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரும், அதிமுகவிலிருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான செந்தில் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தன் வீடு முன்பு திரண்ட ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய அவர் இதனைக் கூறினார்.

தன்னிடம் என்ன சம்பாதிச்சிருக்கீங்க என்று தான் கேள்வி கேட்க முடியும் என்றும் அதற்கு உங்களை தான் சம்பாதிச்சிருக்கேன் என ஐடி அதிகாரிகளிடம் நான் கூறுவேன் எனவும் தனது ஆதரவாளர்களிடம் செந்தில் கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதனால் தயவு செய்து வீட்டு முன் நின்று கஷ்டப்பட வேண்டாம் என்றும் எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு செல்லுமாறும் கூறினார். இதனை இவராக இவர் சொல்லவில்லை என்பதும் காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் இப்படி சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக வலம் வந்த செந்தில் கார்த்திகேயன், திடீரென திமுகவில் இணைந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளராக மாறிவிட்டார்.
ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வரும் செந்தில் கார்த்திகேயன் கோவை புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான சொகுசு பங்களா கட்டியிருப்பதுடன் விலையுயர்ந்த லக்சுரி வகை கார்களை பயன்படுத்தி வருகிறார்.
இதனிடையே இவர் வீட்டில் நடத்தப்படும் ஆய்வானது இன்றோ அல்லது நாளையோ நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications