ஸ்ட்ராங் ரூமில் செயல்படாத சிசிடிவி.. சும்மா காரணத்தை சொல்லாதீங்க.. பாஜக எல் முருகன் டென்ஷன்
கோவை: நீலகிரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததற்கு காரணம் சொல்ல வேண்டாம் என்றும் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று பாஜகவின் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

நீலகிரி தொகுதி: தமிழகத்தில் முதற்கட்டமாகவே 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட ஸ்ட்ராங் ரூம் என்ற அறைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடந்த அந்தந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமானது 24 மணி நேரமும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 163 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமிராக்கள் நேற்று திடீரென செயலிழந்தது.
செயல்படாத சிசிடிவி: வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயலிழந்ததால் அங்கு பரபரப்பு உண்டானது. சுமார் 20 நிமிடங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையில், சிசிடிவி கேமிரா பதிவுகளை காணக்கூடிய திரையில் எந்தக் காட்சியும் ஒளிபரப்பாகாமல் இருந்ததால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு உண்டானது.
20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், அதீத வெப்பம் காரணமாகவே, சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் பெட்டி சூடாகி, செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெயில் அடிக்கும் என்பது முன்பே தெரியும். எனவே காரணம் சொல்லாமல் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக எல் முருகன் தெரிவித்துள்ளார்.
எல் முருகன் பேட்டி: இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன் கூறியிருப்பதாவது:- நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்து இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார் 20 நிமிடம் அரசியல் கட்சியினருக்கு ஸ்ட்ராங் ரூமின் சிசிடிவி காட்சிகள் ஸ்கிரீனில் தெரியவில்லை.
அதீத வெப்பம், டெக்னிக்கல் ஃபால்ட் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த டெக்னிக்கல் ஃபால்ட்கள் வராமல் பார்க்க வேண்டியது தான் தேர்தல் ஆணையத்தின் முறையான வேலை. காலநிலையை காரணமாக சொல்கிறார்கள். வெயில் அதிகம் அடிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும் தானே, எனவே அவர்கள் தான் இதனை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.
காரணம் சொல்வதை நிறுத்திவிட்டு: சேலம், நாமக்கல்லில் இருக்கின்ற வெயில் நீலகிரியில் இல்லை. சும்மா காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக டெக்னாலஜி என்னவோ, அதனை சரியாக பயன்படுத்தி 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். எந்த வித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி ஆட்சியர் விளக்கம்: முன்னதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமிரா செயலிழந்தது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறுகையில், "வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளது. இதில் ஏதும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அப்படி, சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளோம்.
அதிக வெப்பத்தால் தான் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்துள்ளன. சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை" என்று விளக்கம் அளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications