பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
கோவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க செய்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகத்தின் மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார்.

முன்னதாக அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கோவையில் ரோடு ஷோ நடத்தினார். கடந்த மாதம் 18ம் தேதி கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கிய பிரதமர் மோடியின் திறந்த வாகன ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தது.
இதில் பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. தேர்தல் பிரசாரங்கள், நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது விதியாக உள்ள நிலையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிகள் மீறப்பட்டதா? என்ற கேள்வி எழும்பியது.
கோவைக்கு எச்சரிக்கை.. மக்களே மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க.. கலெக்டர் ‛அட்வைஸ்’
இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் ரோடு ஷோவில் பங்கேற்றது சாய்பாபா காலனியை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா விசாரித்தார். அதன்பிறகு பள்ளி நிர்வாகம் மீதும், பள்ளி தலைமையாசிரியை புகழ் வடிவு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தலைமையாசிரியை புகழ் வடிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‛‛பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக கூறுவது தவறானது. பிரசாரத்துக்கு மாணவர்களை பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரும் உண்மைக்கு புறம்பானது. பள்ளி நிர்வாகம் மீது தவறான நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோவை போலீசார் ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை பள்ளி நிர்வாகம் மீது போலீசார் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டார். இதற்கிடையே தான் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் அதன் தாளாளர்கள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
அந்த மனுக்களில், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே, பேரணிக்கு அழைத்து சென்றதாகவும், மாணவர்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை எனவும், மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்தார். இதனால் கோவை பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு தடை அல்லது வழக்கு ரத்து செய்யப்படுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications