கோவைக்கு எச்சரிக்கை.. மக்களே மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க.. கலெக்டர் ‛அட்வைஸ்’
கோவை: வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட மக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கிராந்தி குமார் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மேலும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீட்டில் ஏசி, பேன் இன்றி பொதுமக்களால் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு கோவையும் விதிவிலக்கல்ல. கோவையிலும் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையில் 102 பாரன்ஹிட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் கோவை கலெக்டர் கிராந்தி குமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‛‛ கோவை மாவட்டத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். கடும் வெயிலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications