சுசி ஈமு நிதி நிறுவன உரிமையாளருக்கு 10 வருடம் ஜெயில்.. கோவையில் ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி
கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குருசாமி என்பவர் கடந்த 2010ம் ஆண்டு சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இவர் அறிவித்த கவர்ச்சி திட்டங்களை நம்பி பலர் லட்சக்கணக்கில் ஏமாந்தனர். இதில் பல கோடி மோசடி நடந்தது. இந்த வழக்கில், நிறுவன உரிமையாளரான குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையையும், ரூ.19 கோடியை அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 44 வயதாகும் குருசாமி கடந்த 2010-ம் ஆண்டு, பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவர் வெளியிட்ட, கவர்ச்சிகரமான திட்டங்கள் தமிழ்நாடு முழுக்க பிரபலம் ஆனது. பலரும் ஆர்வமுடன் முதலீடு செய்தனர். இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு மாவட்டங்களில் ஆரம்பம் ஆனது. கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் என தமிழ்நாடு முழுக்க ஈமு கோழி பேமஸ் ஆனது. இதனால் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா நிறுவனத்தில் பலர் பணம் கட்டி சேர்ந்தனர்.

இவர்களுக்காக நிறுவனத்தின் உரிமையாளர், முதல், 2-வது மற்றும் வி.ஐ.பி. என 3 பிரிவுகளில் திட்டத்தை அறிவித்து ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளார். இதில் பகுதிகளில் மோசடி நடந்தது. இந்நிலையில் கோவை பகுதியில் மட்டும் மொத்தம் 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19 கோடியே 2 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டான டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். மேலும் மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி செய்த தொகையான ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை அபராதமாக செலுத்தவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
அதேநேரம் சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். தற்போது மோசடி செய்யப்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருப்பதால், பணம் செலுத்தி ஏமாந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. கோவையை தவிர, சுசி ஈமு நிதிநிறுவனம் மீது ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம் மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications