என் உயிரில் தமிழ் இருக்கிறது.. சிபிஎஸ்இ மூலம் அனைவருக்கும் சமமான கல்வி..நாராயணசாமிக்கு தமிழிசை பதில்
கோவை: தமிழிசை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் மொழியை அழிப்பதாக கூறிய நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். அனைவரும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க போகிறது.
புதுச்சேரியில் மூன்று வகையான பாடத் திட்டங்களை பின்பற்றுகிறோம். தனி கல்வி வாரியம் இல்லாத யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தற்போது வரை தமிழக பாடத் திட்டங்களைத்தான் பின்பற்றி வருகிறது. அதேபோல மாஹே பிராந்தியத்தில் கேரள பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்பதை எண்ணித்தான் நாம் சிபிஎஸ்இ கல்வியை கொண்டு வருவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
என் உயிரில் தமிழ்
தொடர்ந்து தமிழ் படிப்பதை தமிழிசை தடுக்கிறார் என்ற நாராயணசாமி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நாராயணசாமியின் குற்றச்சாட்டை உறுதியாக மறுக்கிறேன். தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது. நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரவில்லை.
ஏன் இந்த முடிவு?
நாங்கள் ஒரே மாதிரியான கல்வியை கொண்டுவர முயற்சி செய்கிறோம். ஒரு சகோதரியாக அந்த மாநிலத்தில் இருந்து இதை கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறேன். அறிவாற்றல் உள்ள குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மருத்துவராக கூறும் தமிழிசை
தொடர்ந்து, சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் தமிழ் வரவில்லை என கூறவில்லை. குழந்தைகளின் அறிவாற்றலுக்கு நாம் தீனி போடுவதில்லை. குழந்தைகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளும். மருத்துவராக இருப்பதால் கூறுகிறேன். இந்த மூளை எட்டு வயது வரைக்கும் எத்தனை மொழிகளை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் அந்த எட்டு வயது வரை குழந்தைகளை நாம் இன்னொரு மொழியை படிக்க விடுவது கிடையாது.
அரசியல்வாதிகள் சொல்ல வேண்டாம்
ஆகவே இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது அவர்களின் வாய்ப்புகளை பெருக்குவதற்காக தான். எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி சிபிஎஸ்இ வேண்டாம், இன்னொரு மொழி வேண்டாம், நீட் வேண்டாம் என்பதை கல்வியாளர்கள், மாணவர்கள் சொல்லட்டும். அரசியல்வாதிகள் இதை சொல்ல வேண்டாம் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மாணவர்களுக்கு சுமையல்ல
பின்னர், கூடுதலாக இன்னொரு மொழியை கற்றுக் கொடுப்பது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. இதில் நாராயணசாமியை விட எனக்கு அதிகமான அக்கறை இருக்கிறது. அனைவரிடமும் கருத்து கேட்டு அனைவருக்கும் நேர்மையான கல்வி கிடைக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.