எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் சொதப்பல்.. அண்ணாமலையால் தமிழக பாஜகவுக்கு பலன் இல்லையா?
கோவை: கரூர் என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் ஆகும். ஆனால் பிரதமராக மோடியை தேர்ந்தெடுக்க வேண்டிய இந்த தேர்தலில் அண்ணாமலைக்கு செல்வாக்கு உள்ள பகுதியாக கருதப்படும், கரூர் மற்றும் கோவையில் தடுமாறுகிறது . அண்ணாமலையால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லையா என்று திமுக, அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி தொகுதியில் மட்டும் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். இதில் நாமக்கல் தொகுதியில் மட்டும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தலான இந்த லோக்சபா தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாகும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க விரும்பிய நிலையில், அதற்கு இந்த முறை தென்மாநிலங்களில் கணிசமான எம்பிக்களை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியது. அதற்காக ஆந்திராவில் தெலுங்குதேசத்துடனும், கேரளாவில் தனியாகவும், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இல்லாமல் தனித்து கூட்டணி அமைத்தும், கர்நாடாகவில் மஜதகவுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்தது. தெலுங்கானாவிலும் தனித்து களம் இறங்கியது.
இதில் கேரளாவில் ஒரு இடத்தில் கணக்கை தொடங்க உள்ளது. ஆந்திராவை பொறுத்தவரை பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் ஜேஎன்பி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கர்நாடகாவில் பாஜக 17 இடங்களிலும், ஜேடிபி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கானாவில் பாஜக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வடமாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை தென்மாநிலங்களில் வைத்து சரிசெய்ய நினைத்த பாஜகவின் கணக்கு சரியாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை வேறாக உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 39 தொகுதியில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. அதன் கூட்டணி கட்சியான பாமக மட்டுமே ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. அதுவும் பாமகவின் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள தர்மபுரியில் முன்னிலையில் இருக்கிறது.
அண்ணாமலைக்கு செல்வாக்குள்ள பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காங்கிரஸின் ஜோதிமணி 38103 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அதிமுகவின் தங்கவேல், 31329 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் செந்தில்நாதன் வெறும் 7039 வாக்குகளைப் பெற்றுள்ளார்
அண்ணாமலை தான் போட்டியிட்ட கோவை தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 103777 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 65240 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 40831 3ம் இடத்தில் இருக்கிறார். அண்ணாமலையைவிட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 38537 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். முன்னிலை நிலவரங்களை பார்க்கும் போது, அண்ணாமலையால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லையா என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன. மோடியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தலிலேயே அண்ணாமலை செல்வாக்குள்ள பகுதிகளாக கருதப்பட்ட இடங்களிலேயே பாஜக தடுமாறுவதை சுட்டிக்காட்டி திமுக, அதிமுகவினர் சமூக ஊடகங்களில் விமர்ச்சிக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications