சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை!
கோவை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள சில "மூடிமறைப்பு" நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய உத்தர பிரதேசத்தின் 'ஹத்ராஸ்' (Hathras) கொடூரத்தை நினைவூட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலை, பெற்ற தாயின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல், நள்ளிரவில் அவசர அவசரமாக தகனம் செய்த காவல் துறையின் செயல்பாடு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதையும், நிர்வாகத் தோல்வியை மறைக்க அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையும் அப்பட்டமாகக் காட்டியுள்ளது.

உத்தர பிரதேச 'ஹத்ராஸ்' சம்பவமும், சூலூர் கொடூரமும்:
கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒரு இளம் தலித் பெண் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அந்த மக்கள் கொந்தளிப்பை அடக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டியும், உத்தர பிரதேச காவல் துறை அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு, நள்ளிரவு 2:30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக உடலைத் தகனம் செய்தது.
தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நள்ளிரவுத் தகனம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து (Suo-Moto) வழக்குப் பதிவு செய்து, "இது மனித மனசாட்சியை உலுக்கிய செயல்" என்று உத்தர பிரதேச அரசைக் கடுமையாகக் கண்டித்தது.
தற்போது 2026-ல், தமிழ்நாட்டின் கோவையிலும் அதே உத்தர பிரதேச பாணி (UP Model) அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் நேரில் வந்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறுமியின் தாய் போராடிக் கொண்டிருந்த வேளையில், காவல் துறையினர் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக உடலைக் கடத்திச் சென்றுள்ளனர். பெற்ற தாய்க்குத் தன் மகளின் முகத்தைக் கூடக் காட்டாமல், நள்ளிரவில் அவசர அவசரமாகச் சேலத்தில் உடலைத் தகனம் செய்த காவல் துறையின் செயல், அன்று ஹத்ராஸில் நடந்த அதே பாசிசச் செயல்பாட்டைத் தான் நினைவூட்டுகிறது.
தப்பிக்க நினைக்கும் விஜய் அரசு:
தேர்தல் பிரச்சாரங்களின் போது உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடக்கும் குற்றங்களையும், அங்குள்ள சட்டம் ஒழுங்கையும் சுட்டிக்காட்டிப் பேசியவர் தான் இன்றைய முதல்வர் சி. ஜோசப் விஜய். ஆனால், இன்று அவரது சொந்த ஆட்சியிலேயே ஒரு 10 வயது சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாமல் எரிக்கும் அளவிற்குத் தமிழக காவல் துறை துணிந்துள்ளதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்?
ஹத்ராஸ் சம்பவத்தில் எப்படி அப்போதைய உத்தர பிரதேச அரசு "பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவே இல்லை" என்று போலியான தடயவியல் அறிக்கைகளை முன்வைத்து வழக்கை திசைதிருப்ப முயன்றதோ, அதேபோல் இங்கும் டிவிகே ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், "குழந்தையின் தாய் போதையில் இருந்தார்" என்ற அவதூறைப் பரப்பி வழக்கை திசைதிருப்ப முயல்கின்றனர்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் குற்றவாளி இருப்பது போன்ற ஏஐ (AI) போலிப் புகைப்படங்களை உருவாக்குவது, இன்ஃப்ளூயன்சர்களுக்குப் பணம் கொடுத்து நரேட்டிவை மாற்றுவது என உத்திர பிரதேச பாஜக அரசை விட ஒருபடி மேலே போய் டிவிகே கார்ப்பரேட் பாணியில் வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிர்வாகத் தோல்வியின் உச்சம்:
"மாற்றம் தருவோம்" என்று கூறி ஆட்சிக்கு வந்த விஜய் அரசு, இன்று வட மாநிலங்களின் மோசமான நிர்வாக உத்திகளைத் தமிழ்நாட்டில் கையாள்வது அமிழ்தைப் போன்ற தமிழ் மண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், ஒரு தாயின் இறுதி அஞ்சலி உரிமையைப் பறித்த இந்தச் செயல் விஜய் அரசின் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு கறையாகவே நிலைத்து நிற்கும்.












Click it and Unblock the Notifications