கோவைக்கு விரைந்த "ரா" ஏஜெண்ட்ஸ்.. உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர்! அதிர்ச்சி காரணம்!
கோயம்புத்தூர்: உக்ரைன் ராணுவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்ந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை அமைப்பான ரா விசாரணை நடத்தி வருகிறது.
Recommended Video
உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தி வருகிறது. இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, 2 முறை போர் நிறுத்தம் தற்காலிகமாக செய்யப்பட்டது.
ஆனாலும் முழுமையாக போர் முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைனில் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கார்கிவ், தலைநகர் கீவ் ஆகிய நகரங்களில் கடுமையான போர் நடந்து வருகிறது.

தமிழர் உக்ரைன்
உக்ரைன் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா கொஞ்சம் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடுதான் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்ந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் ரவீந்திரன் உக்ரைன் ராணுவத்தில் போருக்காக சேர்ந்தார் . உக்ரைன் நாட்டில் இவர் கார்கிவ் நகரில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி பல்கலையில் விண்வெளி அறிவியல் படித்து வந்தவர் இவர்.

அதிபர் கோரிக்கை
முன்னதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக போர் செய்ய பொதுமக்களை அழைத்தார். பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கினார். அதோடு கைதிகளை விடுவித்து அவர்களுக்கும் துப்பாக்கி வழங்கி ரஷ்யாவிற்கு எதிராகபோர் செய்யும்படி அறிவித்தார். உக்ரைனில் இருக்கும் வெளிநாட்டு மக்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த விரும்பினால் அவர்களுக்கும் ஆயுதம் தரப்படும், அவர்களையும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்ன நடந்தது
உக்ரைன் அதிபரின் இந்த வேண்டுகோளை ஏற்று பலர் சாரைசாரையாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தனர். ரஷ்ய படைகள் தற்போது உக்ரைனில் திணறுவதற்கு காரணமாக இப்படி அதிக அளவில் மக்கள் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த காரணத்தால்தான். இந்த நிலையில்தான் தமிழர் சாய் நிகேஷும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து உள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக போர் செய்யும் விதமாக மாணவர் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார்.

துப்பாக்கி
துப்பாக்கியை ஏந்தி இவர் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து போரிட்டு வருகிறார். இதையடுத்து தகவல் அறிந்த இந்திய உளவுத்துறை நேற்று இரவு கோவைக்கு விரைந்தனர். நிகேஷ் வீட்டிற்கு சென்ற ரா அமைப்பினர் மற்றும் சில ராணுவ பிரிவினர் அங்கு கடும் விசாரணை நடத்தினர். அதன்படி நிகேஷ் 2018ல் பள்ளி முடித்து இந்திய ராணுவத்தில் இணைய முயன்று இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

உயரம்
உயரம் காரணமாக இந்திய ராணுவத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சோர்வு அடைந்த அவர் அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைய முயன்று இருக்கிறார். ராணுவத்தில் சேர்வது மட்டுமே இவரின் குறிக்கோளாக இருந்துள்ளது. அது நடக்காத பட்சத்தில் உக்ரைனுக்கு விண்வெளி அறிவியல் படிக்க சென்று, தற்போது போரை பயன்படுத்திக்கொண்டு அங்கே ராணுவத்தில் இணைந்து இருக்கிறார்.

வாய்ப்பு
உக்ரைனில் சிறிய நிறுவனம் ஒன்றில் இவருக்கு வேலை கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த வேலையை விட்டுவிட்டு நிகேஷ் உடனடியாக ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார். போர் தொடங்கிய 3வது நாளே இவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார். கையில் துப்பாக்கியுடன் உக்ரைன் படைகளுடன் இவர் கார்கிவ் பகுதியில் போரிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications