இரும்பு கோட்டை.. கொங்கு பெல்டில் திமுகவிற்கு செக் வைத்த அதிமுக.. என்ன நடக்கிறது மேற்கு தமிழகத்தில்?
கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிபெறும் என்று கணிப்புகளை மிஞ்சி பல்வேறு தொகுதிகளில் தற்போது அதிமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 139 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
'சேலம் எங்களின் கோட்டை'.. மீண்டும் நிரூபிக்கும் அ.தி.மு.க.. 11 தொகுதிகளில் 9-ல் அதிரடி முன்னிலை!
அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் குறைவான வாக்குகளே வித்தியாசம் இருப்பதால் நிலவரம் போக போக மாறும் என்கிறார்கள்.
கோவை
முக்கியமாக கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் திமுக இந்த முறை வெற்றிபெறும் என்று கணிப்புகள் கூறின. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கொங்கு மாவட்டங்களில் திமுக 30 -35 இடங்களை வெல்லும், அதிமுக 20 இடங்களுக்கும் குறைவாகவே வெல்லும் என்று கூறப்பட்டது.
ஆனால்
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய இரண்டு கருத்து கணிப்புகளிலும் கொங்கில் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் தற்போது கொங்கு மாவட்டங்களில் திமுகவை விட பல தொகுதிகளில் அதிமுக முன்நிலை வகித்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள 9 மக்களவைத் தொகுதிக்குப்பட்ட 54 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது.
54 தொகுதிகள்
இந்த 54 தொகுதிகளில் கிட்டத்தட்ட 28 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. முக்கியமாக சேலம், கோவை மாவட்டங்களில் திமுகவைவிட அதிமுகதான் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், எடப்பாடி, தொண்டாமுத்தூர், குமாரபாளையம், தாராபுரம், பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகள் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக
2016 தேர்தலில் 54 இடங்களில் 44 இடங்களில் அதிமுக தனியாகவே வெற்றி பெற்றது. இது போக 10 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறையும் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிமுகவே பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக 180+ இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில் திமுக கனவை கொங்கு மாவட்டங்கள் கலைத்துள்ளது.