'கரூர் டீம்' மிரட்டி லஞ்சம் கேட்கிறார்கள்.. வெகுண்டெழுந்த டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்! கோவையில் பரபர
கோவை: கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் அலுவலகத்தை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் டீம் என்ற பெயரில், ஈஸ்வரமூர்த்தி , அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டுவதாகவும் டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு மதுபானக்கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்க்கப்படுவதாகவும், கரூர் கேங்க் என கடைகளில் வசூல் நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. குறிப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. எனினும், இந்த குற்றச்சாட்டை ஆளும் தரப்பு நிராகரித்து வருகிறது.

அதேவேளையில் தற்போது டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறி விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தடுக்க தற்போது டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொள்முதல் முதல் விற்பனை வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும், இன்னும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபடுகின்றன. சில இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்களும் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.
இதற்கிடையே தான், கோவையில் கரூர் டீம் எனக் கூறி மீண்டும் வசூல் வேட்டை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்று கூறப்படும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் அலுவலகத்தை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடைக்கு 2 முதல் 3 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கரூர் டீம் என்ற பெயரில், ஈஸ்வரமூர்த்தி என்பவர், அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டுவதாகவும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், பணம் இல்லை என்று மறுத்தால், மதுவிலக்கு போலீசாரை விட்டு மிரட்டி பொய் வழக்கும் பதிவு செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அது மட்டும் இன்றி ஈஸ்வரமூர்த்தியின் அடியாட்கள் அரசு டாஸ்மாக் உரிமையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மிகவும் ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கொதித்து எழுந்த பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர்கள், இன்று கோவை சாய்பாபா காலணி அண்ணாமலை சாலையில் உள்ள ஈஸ்வர மூர்த்திக்கு சொந்தமான அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் வந்து சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications