டாஸ்மாக் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு மாதத்தில் முற்றுப்புள்ளி.. அமைச்சர் முத்துசாமி உறுதி!
கோவை: டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு பயணாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் செய்வதை அதிகாரிகள் அதிக கவனம் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் இன்று 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் அளவில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேகமாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருதமலை கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லை. அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் அங்கே வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். பீக் ஹவர் மின்கட்டணம் தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
மேலும் பேசிய அவர், "டாஸ்மாக் கடை தொடர்பாக நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications