பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை.. மன அழுத்தத்தால் விபரீத முடிவு?!
கோவை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களின் 7 மாத குழந்தை கிரண்மயி. தாய் ரம்யா, குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து தவறி சன் சைடில் விழுந்தது.

பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சன் சைடு தகர ஷீட்டில் சரிந்தபடி கீழே வந்தது. இதைப் பார்த்து எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரையில் சறுக்கி, நுனிக்கு வந்தது.
ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர். முதலில் குழந்தை தவறி கீழே விழுந்தால் காயம் படாத வகையில் பெரிய மெத்தை, ஜமுக்காளத்தை கொண்டு வந்து குழந்தையை பிடிக்க முயன்றனர். கீழ் வீட்டின் ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர், குழந்தையை ஒற்றைக் கையில் லாவகமாக பிடித்து தூக்கி காப்பாற்றினர்.
நெஞ்சைப் பதற வைத்த இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் பரவியது. இதற்கிடையே கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை தன் பிடியில் இருந்து தவறி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் ரம்யா, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்.
இதையடுத்து, வெங்கடேஷும், ரம்யாவும், குழந்தையுடன் தங்கள் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடைக்குச் சென்றனர். அங்கு கடந்த சில வாரங்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரம்யா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காரமடை போலீசார், ரம்யாவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் குழந்தை தவறி விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையின் தாய் ரம்யா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications