கோவை திமுக எம்பிக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் டாஸ்மாக்.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.. பரபரப்பு
கோவை: கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை கணபதி - சங்கனூர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளால் பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுடன், மது போதையில் சாலையில் சண்டை போடுவதுடன், அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றன. இதன் காரணமாக குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகள், கோவில் , மசூதி, தேவாலயம் போன்ற பகுதிகளின் அருகில் வைக்க அனுமதிக்கப்படுவது இல்லை.

அதேபோல் மதுக்கடைகள் இருக்கும் ஊர்களில் மக்களின் வருவாய் பணம் கணிசமாக மதுவிற்கே செல்வதால், அந்த கடைகளை அமைக்க பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மதுக்கடைகளால் அச்சுறுத்தலும் இருப்பதால், மதுக்கடைகளை முக்கியமான வீதிகளில் அமைக்கவும் எதிர்ப்புகள் உள்ளது. அந்த வகையில் கோவையில் ஒரு சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அப்படித்தான் கோவை கணபதி - சங்கனூர் இடையேயான சாலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கோவை கணபதி - சங்கனூர் இடையேயான சாலையில் டாஸ்மாக் கடை எண்:1638 கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
எனினும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூட எந்த நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் கடை முன்பு அமர்ந்து இன்று (வியாழக்கிழமை) திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மறியல் ஈடுபட்டவர்களிடம் கூறினார்கள். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். மேலும், இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என யாரும் அப்பகுதியில் நடமாடவே முடியாத சூழல் நிலவுவதால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கலெக்டருக்கு வேண்டுகோள் வைத்தனர்.












Click it and Unblock the Notifications