கேரளாவை புரட்டிப்போட்ட சாலை விபத்து: ஓராண்டுக்குப் பின் கோவையில் சிக்கிய குற்றவாளி.. பின்னணி என்ன?
கோவை: கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே கடந்த ஆண்டு சாலையை கடக்க முயன்ற பேத்தி மற்றும் பாட்டி ஆகியோர் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக ஓராண்டிற்குப் பிறகு குற்றவாளி கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேபி என்ற மூதாட்டி மற்றும் அவருடைய 9 வயதான பேத்தி திரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர்.

Image: AI Created
அப்போது, அவ்வழியாக மிகவும் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீது மோதிவிட்டு கண்ணிமைக்கும் நொடியில் பறந்து சென்றது. இந்த விபத்தில் மூதாட்டியும், பேத்தியும் ரத்தவெள்ளத்தில் பலத்த காயமடைந்தனர். மூதாட்டி பேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேத்தி திரிஷ்னா பலத்த காயமடைந்ததில் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கோழிக்கோடு மருத்துவமனையில் சிறுமி திரிஷ்னாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இச்சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கி போட்டது. விபத்து ஏற்படுத்திய கார் குறித்த விவரங்களை போலீஸார் கண்டறிய முடியாமல் திணறி வந்தனர்.
மனித உரிமை ஆணையம் மற்றும் கேரளா உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கினர். இதனால், இந்த விபத்து சம்பவம் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்பட்டு வந்தது. கேரள போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி ஷஜீல் என்பதும், விபத்தை ஏற்படுத்தி விட்டு அவர் வெளிநாடு தப்பி சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, ஷஜீலை விசாரணைக்கு அழைத்து வந்த நிலையில், அவர் ஆஜராகாமலே இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேரளா போலீசார் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில், ஓராண்டிற்குப் பின்னர் ஷஜீல் துபாயில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த அவரை குடியுரிமை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். பின்னர், ஷஜீல் கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஓராண்டிற்குப் பிறகு சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை போலீஸார் கோவையில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications