கோவை டாஸ்மாக் கடையில் திண்டுக்கல் இளைஞரின் காதை அறுத்து வீசிய தேனி இளைஞர்.. என்ன காரணம்?
கோவை: கோவை டாஸ்மாக் மதுக்கடையில் தலைக்கேறிய போதையில் வம்பிழுத்த திண்டுக்கல் இளைஞர் பிரபாகரனை, தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவர் காய்கறியை நறுக்குவது போல் காதை அறுத்து வீசினார். காயம் அடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதை அறுத்து வீசிய ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்த 35 வயதாகும் ராமச்சந்திரன் என்பவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கோவை மாதம்பட்டி பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்த 27 வயதாகும் பிரபாகரன் என்பவரும் அதே பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். அண்மையில் பிரபாகரன் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவருக்கு எதிரே ராமச்சந்திரனும் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.

இந்த நிலையில் அங்கு மது குடிக்க வந்த ஜெயராமன் என்பவர், அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கியுள்ளார். இதை பார்த்த ராமச்சந்திரன் மற்றும் அங்கிருந்த சிலர், ஓடி சென்று கீழே விழுந்தவரை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த பிரபாகரன் போதை தலைக்கேறிய நிலையில், ராமச்சந்திரன் தான் அந்த நபரை தாக்கி கீழே தள்ளி விட்டதாக நினைத்து ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன், அப்போது எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.
எனினும் தன்னை அடித்த பிரபாகரன் மீதும் கடும் ஆத்திரத்தில் இருந்த ராமச்சந்திரன், வீட்டுக்கு சென்று அங்கு காய்கறி வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து கொண்டு மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைக்கு வந்தார். அங்கு பிரபாகரனை தேடினார். அவர் அப்போது அதே இடத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார். ராமச்சந்திரன் வந்ததை பார்த்த, பிரபாகரன், அப்போது போய் விட்டு, இப்போ ஏன் வந்திருக்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்தார். பின்னர் பிரபாகரனின் கையை பின்பக்கமாக பிடித்து கொண்டு, அவரின் வலது காதில் கத்தியை வைத்து காய்கறியை நறுக்குவது போல காதை தனியாக அறுத்தெடுத்து வீசினார். இதில் வலி தாங்க முடியாத பிரபாகரன் அலறியுள்ளார். இதை கண்ட அங்கிருந்தவர்கள், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கத்தியால் வாலிபரின் காதை அறுத்த ராமச்சந்திரன் பழிக்குபழி வாங்கி விட்டதாக உளறிக் கொண்டிருந்தார். அவரை அங்குள்ளவர்கள் சுற்றி வளைத்து பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்தனர், போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைக்கேறிய போதையால் தகராறு செய்து இளைஞரின் காதை தொழிலாளி அறுத்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications