கோவையில் திருடப் போன வீட்டில் தங்கம், பணம் இல்லை.. வங்கி மேனேஜருக்கு மறக்க முடியாத சம்பவம்
கோவை: திருடர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.. திருட போன வீட்டில் சாப்பிடுவது, தூங்குவது, திருட ஒன்றும் இல்லை என்றால், பொருட்களை போட்டு உடைத்து செல்வது போன்ற செயல்களை செய்வார்கள்.. கோவை சரவணம்பட்டியில் நகை, பணம் இல்லாததால் வங்கி அதிகாரி வீட்டில் கியாஸ் அடுப்பு, சிலிண்டரை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளார்கள்.
கோவை சரவணம்பட்டி திருமுருகன் நகரை சேர்ந்த 34 வயதாகும் அருண் குமார் என்பவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு வங்கியில் துணை மேனேஜனராக வேலை செய்து வருகிறார். வங்கி மேலாளர் அருண் குமார் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அவர் நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பதறி அடித்தபடி வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த வெள்ளி கை செயின், தோடு, கியாஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தார்கள். வீட்டில் தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை வைத்து இருக்க வில்லை . இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பு, சிலிண்டர், மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வீடு புகுந்து திருடியவர்கள் வேலூர் அருகே கைது: வேலூர் கணியம்பாடியில் வீடு புகுந்து திருடிய ராணிப்பேட்டையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கணியம்பாடி அருகே உள்ள அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த சோடியா என்பவர் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார்கள். வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். வெளியே சென்ற சோடியா மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ந்து போனார்.
இதுகுறித்து அவர் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரித்தனர்.
அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்ததும், சோடியா வீட்டில் புகுந்து திருடியதும் தெரியவந்தது. அவர்கள் ராணிப்பேட்டையில் பதுங்கி இருந்ததை அறிந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (வயது 28), ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்ற இம்மானுவேல் (54) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 4 பவுன் நகை, வெள்ளி கால் கொலுசு 2 ஜோடி, மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications