பாஜக இல்லாமல் அரசியல் நகர்வா.. தமிழ்நாட்டில் இனி வாய்ப்பே இல்லை.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!
தமிழ்நாட்டில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் நடக்காது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை: தமிழ்நாட்டில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள், அரசியல் நகர்வுகள் நடக்காது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதேபோல் பொறுப்பும் பொறுமையும் சரிவிகிதத்தில் கொண்டு அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் அறிவுறுத்தினார்.
அண்மைக் காலமாக அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார், அண்ணாமலையை குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த பாஜகவினர்
தொடர்ந்து, பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் என ஏராளமான பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து ஏற்கெனவே விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அமர் பிரசாத் ரெட்டி பதிவு
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக இதனை செய்திருக்க கூடாது. வரும் காலத்தில் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும் என்று பதிவிட்டார். அதேபோல் அதிமுகவுக்கு கண்டனமும் தெரிவித்தார்.

அதிமுகவினர் கொந்தளிப்பு
அமர் பிரசாத் ரெட்டியின் கருத்துக்கு அதிமுக ஐடி விங் நிர்வாகிகளும் பதிலடி கொடுக்க, விவகாரம் பெரிதாகியது. அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கடுமையாக விமர்சித்தார்.

வானதி சீனிவாசன் பேச்சு
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அதில் வானதி சீனிவாசன் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் அரசியல் நகர்வுகள் நடக்காது. பொறுப்பும் பொறுமையும் சரிவிகிதத்தில் கொண்டு அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications