"இப்பதான் சூடுபிடிக்குது".. விஜயின் பயணம்.. திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை
கோவை: திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இப்போதுதான் விஜயின் களப் பணிகள் தீவிரமடைகிறது. விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு மனிதன் பெயரால் வன்முறைகள், இனத்தின் பெயரால் வன்கொடுமைகள் ஜாதியின் பெயரால் நாள்தோறும் பேரிடர்கள் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற மனநிலை தான் உள்ளது. யார் வீடோ எரிகிறது என்ற எண்ணத்தில் உள்ளனர் கண்டும் காணாமல் இருப்பது போன்று உள்ளனர்.
மனிதநேயம்
பௌத்தர்கள் என்பதால் படுகொலை செய்யப்படுகிறார்கள், இஸ்லாமியர் என்பதால் படுகொலை செய்கிறார்கள் தமிழர்கள் என்பதால் படுகொலை செய்யப்படுகிறார்கள், தலித் என்பதால் படுகொலை செய்யப்படுகிறார்கள், பழங்குடியினர் என்பதால் படுகொலை செய்யப்படுகிறார்கள், பெண்கள் என்பதால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனைக் கடந்து மனிதன் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற சோதனை தந்தவர் கௌதம புத்தர். அவர் மனித நேயத்தை போதித்தார் மனிதன் மீது காட்டுகின்ற மனிதநேயம் எல்லா உயிர்களிடம் காட்ட வேண்டும் என்றார்.
சேதப்படுத்தப்படும் புத்தர் சிலைகள்
இரக்கம் கருணையை போதித்தவர் புத்தர் அவருக்கு எதிரான வெறுப்புகள் பரப்பப்பட்டது. இந்தியா முழுவதும் புத்தரின் சிலைகள் சிதைக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம் அவர் மீதான வெறுப்பு இன்றும் இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் இருப்பதற்கான அடையாளம் புத்தருடைய சிலைகளை ஏன் சேதப்படுத்த வேண்டும் அவர் யாருக்கு எதிராக பேசினார் யார் மீது வெறுப்பு, காட்டினார்?. மனிதர்களை நேசிக்க வேண்டும் எல்லா உயிர்களில் நேசிக்க வேண்டும் என்ற சொன்ன ஒருவரையே எதிராக பார்க்க வேண்டிய உளவியல் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது,
வெறுப்பு அரசியல்
வெறுப்பு அரசியல் கூடாது. உலகில் மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு ஒரே காரணம் அன்பு செலுத்துவது தான். ஒரு கட்சிக்கு எதிராக பேசுவதால் நம் மீது வெறுப்பு இருக்கலாம், வன்கொடுமை பற்றி பேசுகிறோம் அதனால் நம்மீது கோபம் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்வது என நினைக்கும் போது புத்தரை எண்ணிப் பார்க்க வேண்டும், அப்போது இவற்றையெல்லாம் தாங்கிக்கொள்கின்ற சகிப்பு தன்மை வரும் என்றார்.
விஜய்க்கு வாழ்த்து
தொடர்ந்து, செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். விஜயின் பிரச்சார பயணம் குறித்த கேள்விக்கு, இன்று பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள். இப்பொழுதுதான் அவரது களப் பணிகள் தீவிரமடைகிறது. விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது.
திருமாவளவன் சொன்ன வார்த்தை
விஜய் கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.
அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை. விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது. ஆனால், அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள். அணியாக சந்திப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
அண்ணாமலை அரசியல்
பாஜக அதிமுக பிரிந்தால் திமுகவில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை. அண்ணாமலை பாஜக கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது.
அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை விரும்பியதைப் போலவே நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்குவது போன்று தான் எனக்கு தோன்றுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications