மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்
கோவை: மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டம், மகளிர் இலவச பயண திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், தனது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும், முதல்வர் விஜய் தக்க நேரத்தில் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
தவெக மூத்த நிர்வாகியும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான செங்கொட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் தங்கி பரிசோதனை செய்த செங்கொட்டையன் இன்று டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டார். தொடர்ந்து சென்னைக்கு கிளம்பிய செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்
ஆண்டுக்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்வேன். கடந்த 8 மாதங்களாக கடுமையான உழைப்பு காரணமாக செய்யவில்லை. இதனால், கடந்த 2 நாட்களாக மருத்துவனமையில் தங்கி பரிசோதனை செய்தேன். நல்ல உடல் நலத்துடேன் இருக்கிறேன். நான் சிகிச்சை பெற்றது என்னுடைய உறவினரின் மருத்துவமனை. எப்போதும் இங்கேதான் சிகிச்சை பெறுவேன்.
எனவே வேறு மருத்துவமனை சென்று அதற்கான நிதியை அரசிடம் இருந்து பெற வேண்டிய நிலை உள்ளது. என் உறவினரின் மருத்துவமனை. அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது. அதுமட்டுமல்ல. நான் வரும் போதும் போகும் போது.. இங்கே உள்ள விடுதியில்தான் தங்குகிறேன். கோவை சம்பவம் குறித்து ஐஜி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். சட்டத்துறையும் முதல்வரும் உத்தரவை வழங்கியுள்ளனர்” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை எப்போது?
பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.2,500 திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், ”திமுக ஆட்சியில் எப்படி வழங்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியும். எத்தனை வருடம் கழித்து கொடுத்தார்கள். ஆகவே, ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும். இது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இந்த கேள்வியை என்னிடத்தில் கேட்பது சரியாக இருக்காது.
முதல்வர்தான் எந்தெந்த கால கட்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்வார்" என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
விஜய் கொடுத்த வாக்குறுதி
அதேபோல, மகளிருக்கு தற்போது அரசு நகர பேருந்துகளில் மட்டும் இலவச பயணம் வழங்கப்படும் நிலையில், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.
தற்போது விஜய் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ரூ.2,500 வழங்கும் திட்டம், மகளிர் விடியல் பயணம் திட்டம் விரிவக்கம் ஆகியவை எப்போது செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செங்கொட்டையன் நிதி நிலமையை பொறுத்து படிப்படியாக அரசு திட்டங்களை செயல்படுத்தும் என்று கூறியுள்ளார்.















Click it and Unblock the Notifications