என்னாச்சு.. 2 புலிகள் அடுத்தடுத்து மரணம்.. உடலில் காயமே இல்லை.. ஆனைமலை காப்பகத்தில் திடீர் பரபரப்பு
8 வயதுடைய ஆண், பெண் புலிகள் 2 மர்ம மரணம் அடைந்துள்ளன
கோவை: உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை.. ஆனாலும் திடகாத்திரமான 2 ஆண், பெண் புலிகள் உயிரிழந்துள்ளன.. இந்த மர்ம மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என்ற 2 கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய 6 வன சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, உட்பட பல விலங்குகள் உள்ளன.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகமானது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன... இப்போதுகூட ஊரடங்கு உத்தரவுக்கு முன்பேயே இங்கு யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுவிட்டது.

சடலம்
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக பகுதியான சேத்துமடையில் வனத்துறையினர் ரோந்து சென்றிருந்தனர்.. அப்போது போத்தமடை பீட் பகுதியில், ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அந்த புலிக்கு வயது 8 இருக்கலாம் என்கிறார்கள். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து சென்றபோது 2 கி.மீ. இடைவெளியில் இன்னொரு பெண் புலியின் சடலத்தை கண்டறிந்தனர். இந்த புலியின் வயதும் 8 தான்! இந்த 2 ஆண், பெண் புலிகளும் எதனால் இறந்தது என உடனடியாக கண்டறிய முடியவில்லை.

சிறுத்தைகள்
அவைகளின் உடம்பில் எந்த காயமும் இல்லை.. அதனால் வேறு விலங்குகள் அடித்து கொன்றிருக்க வாய்ப்பில்லை என்றே வனத்துறையினர் சொல்கின்றனர். 2 புலிகளுமே பார்ப்பதற்கும் நல்ல ஆரோக்கியமான உடல்வாகுடன் இருந்தன.. அதனால் நோய்வாய்ப்படவும் வாய்ப்பில்லாதது போல உள்ளதாம்... இப்பகுதிகளில் ஏற்கனவே புலி தாக்கி கன்றுகுட்டிகள், ஆடுகள், மாடுகள் பல உயிரிழந்துள்ளன. அதேபோல சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வேட்டையாடப்பட்ட நிலையில்தான் இந்த புலிகளும் மர்மமாக உயிரிழந்துள்ளன.

போஸ்ட் மார்ட்டம்
இப்புலிகளின் சடலத்தை அங்கேயே வனத்துறையினர் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. அவைகளின் உடலில் இருந்து ரத்தம், உடல் உறுப்புக்கள் உள்ளிட்ட மாதிரிகள் சேகரித்து சோதனைக்கும் அனுப்பி வைத்ததுடன், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி என்ஜிஓக்கள் முன்பு உடல்களை எரித்தனர்... புலிகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா என்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், காட்டு பன்றியின் மாமிசத்தை சாப்பிட்டு இப்புலிகள் இறந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

விதிமுறைகள்
எதுவாக இருந்தாலும் டெஸ்ட் ரிப்போர்ட் வந்தால்தான் புலிகள் எதனால் இறந்தன என்பது தெரியும்... பொதுவாக, புலி உயிரிழந்துவிட்டால், அந்த தகவல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும்.. அதுமட்டுமல்லாமல், இது சம்பந்தமான நிறைய விதிமுறைகள் உள்ளதால் வரும் வியாழக்கிழமை அன்றுதான் இதற்கான டெஸ்ட் ஆய்வகத்தில் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இப்படி ஒரே நேரத்தில் 2 புலிகள் இறந்து கிடந்தது ஆனைமலையில் திடீர் பரபரப்பை உண்டாக்கிவிட்டது!












Click it and Unblock the Notifications