கோவையில் தேவியின் திருவிளையாடல்.. மாட்டிக்கிட்ட ரேவதி.. இவங்கள பார்த்தாலே உஷாராகுங்க மக்களே
கோவை: கோவை டவுன்ஹாலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் சிக்கி உள்ளனர். கோவையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய கடலூரை சேர்ந்த 2 பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவையில் டவுன்ஹால், பெரிய கடை வீதி, ராஜவீதி, காந்திபுரம் போன்ற பகுதிகளில் அதிக அளவு ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடும் கும்பல் அடிக்கடி கைவரிசை காட்டி வருகிறது. மிகுந்த கூட்டத்திற்கு செல்லும் அந்த திருட்டு கும்பல் அசந்த நேரத்தில் தங்க சங்கிலியை பறிப்பது, பணத்தை பறிப்பது, கையில் வைத்திருக்கும் பைகளை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அப்படி திருடும் கும்பல்களை பிடிப்பது சவாலானதாக இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் தான் திருடினார்கள் என்பதை கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. அதேநேரம் தற்போது சிசிடிவி கேமராக்கள் அதிகமாக உள்ளதால் திருடியவர்கள் சிசிடிவி கேமரா உள்ள பகுதியில் சம்பவங்களை செய்தால் கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறார்கள்.
அவர்கள் திருடிவிட்டு எங்கே தப்பி சென்றாலும் போலீசார் கண்டிப்பாக தூக்கிவிடுவார்கள். அந்த வகையில் தான் கோவையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய கடலூரை சேர்ந்த 2 பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை அருகே வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்த 48 வயதாகும் மலர், அண்மையில் பொருட்கள் வாங்க கோவை டவுன்ஹால் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு பேருந்து மூலம் வீடு திரும்பினார்கள். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் இருந்தது. இதை பயன்படுத்தி அவரது கைப்பையில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருக்கிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மலர், வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நகை திருடியது கடலூர் மாவட்டம் நெல்லி குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ரேவதி (28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்ததோடு நகையையும் மீட்டார்கள். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதே ஊரை சேர்ந்த தேவி(30) உள்பட மேலும் 2 பெண்களுடன் ரேவதி கோவைக்கு வந்து பஸ்கள், கோவில்கள், கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை திருடியது உறுதியானது. இதையடுத்து ரேவதி அளித்த தகவலின்பேரில் தேவியையும் பெரியகடை வீதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த மற்றொரு பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications