கோவை விளையாட்டு துறை நீண்ட கால கனவு நனவாகுது.. உதயநிதி தொடங்கி வைக்கும் மாஸ் திட்டம்
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோவையில் சமீபத்தில்தான் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பெரியார் நூலகம் உள்ளிட்ட சில திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார்.
கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சர்வதேச ஹாக்கி மைதானம்
விளையாட்டு துறையிலும் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. தடகளம், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசியளவிலும், சர்வதேசளவிலும் தடம் பதித்து கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
தற்போது அதற்கான டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல ஹாக்கி விளையாட்டை ஊக்குவிதமாக ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கடநித அதிமுக ஆட்சியில், கோவை மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று 2 முறை அறிவிக்கப்பட்டு, பிறகு கைவிடப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் விசிட்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஹாக்கி பயிற்சி மேற்கொள்வதற்கு பெரிய அளவிலான ஹாக்கி மைதானங்கள் இல்லை என்பதால் அவதிப்பட்டு வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை ஆர்எஸ்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்தன
சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ரூ.9 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், சர்வதேச ஹாக்கி மைதானம் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திமுக டார்கெட்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், திமுக தலைமை கோவை மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுவாக்க திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அதற்கு அடுத்த நாளே உதயநிதி கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கவுள்ளது, அரசியல் ரீதியாக திமுகவுக்கான செல்வாக்கை அதிகரிக்கும் என்று அந்தக் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications